காஷ்மீர் தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்.. நிறுத்திக்கொள்ளுங்கள்.. இந்தியா வார்னிங்
டெல்லி: காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த பஸ் மீது, 350 கிலோ வெடிமருந்துகளை ஏற்றப்பட்ட ஸ்கார்பியோ காருடன் சென்று தீவிரவாதி ஒருவன் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். இதில் 44 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தனது நாட்டிலிருந்து செயல்படும், தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத குழுக்களுக்கும் பாகிஸ்தான் ஆதரவளிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும். ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் அறிவிக்கப்பட்ட தீவிரவாதி. இந்த விஷயத்தில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சக்தி வாய்ந்த வெடிகுண்டு மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், சேதம் கடுமையாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் பாகம் எது? வீரர்களின் உடல் பாகம் என்று தெரியாத அளவுக்கு வீரர்களின் உடல் பாகங்களும், பேருந்தின் பாகங்களும் சிதறி கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.