சீனா, பாகிஸ்தான் எல்லைக்கு தனி கவனம்.. இந்தியா செம.. ரூ.2000 கோடியில் 75 உள் கட்டமைப்புகள் திறப்பு
டெல்லி: காஷ்மீர், லடாக், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட புதிய சாலைகள், பாலங்கள் என மொத்தம் 75 உள்கட்டமைப்புகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
ரூ.2,180 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சாலை மற்றும் பாலங்களால் நாட்டின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மிக நீளமான எல்லைகள்..
உலகின் மற்ற நாடுகளை காட்டிலும், பிற நாடுகளுடன் மிக நீளமான எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. சீனாவுடன் 3,488 கி.மீ. நீள எல்லையையும், பாகிஸ்தானுடன் 3,323 கி.மீ. நீள எல்லையையும் இந்தியா பகிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரு நாடுகளுமே இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிக்கும் நாடுகள் என்பதால் எல்லைப் பகுதிகளில் மிகுந்த கண்காணிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. இருந்தபோதிலும், இந்த அளவுக்கு பெரிய எல்லைகள் முழுவதிலும் ராணுவ வீரர்களை நிறுத்துவது என்பது முடியாத காரியம் ஆகும். ஆதலால், இந்த எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுருவல்கள் அவ்வப்போது நடப்பதும், சில சமயங்களில் நம் எல்லைகள் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்துக்கு உள்ளாவதும் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன.
லடாக் அடித்த எச்சரிக்கை மணி
குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவலில் அங்குள்ள பல பகுதிகளை ஆக்கிரமித்தது பெரிய அளவில் போர் பதற்றத்தை உருவாக்கியது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் செயல்பட்டு லடாக் எல்லையில் இருந்து சீன ராணுவத்தினரை விரட்டியடித்தனர். இருந்தபோதிலும், சில பகுதிகளில் இருந்து சீன வீரர்கள் வெளியேற மறுத்ததால், பேச்சுவார்த்தை மூலமாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த லடாக் ஊடுருவல்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக இருந்தது. எல்லைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் இந்தியாவுக்கு உணர்த்தியது.
உள்கட்டமைப்பில் தீவிர கவனம்
இதன் தொடர்ச்சியாக, சீனா, பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சீனாவின் ஆக்கிரமிப்பு ஆபத்து உள்ள லடாக், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும், பாகிஸ்தான் ஊடுருவல் ஆபத்து உள்ள இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இந்நிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே சீனா, பாகிஸ்தான் நாடுகளை ஒட்டிய எல்லைகளில் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை இந்தியா கட்டி முடித்துள்ளது. இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) ஆகியவை இணைந்து இவற்றை துரிதமாக கட்டி முடித்துள்ளன. அதன்படி, அருணாச்சலப் பிரதேச எல்லையில் 18 சாலைகள், மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. காஷ்மீர் எல்லையில் 20, லடாக் எல்லையில் 18, உத்தரகாண்டில் 5, சிக்கிம், இமாச்சல், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் 14 என மொத்தம் 75 சாலைகளும், மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. ரூ.2,180 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சாலைகளையும், மேம்பாலங்களையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.