கேட்டதை விட 5 மடங்கு அதிக பணம்! நள்ளிரவில் பணமழை கொட்டிய ஏடிஎம்.. கார்டுகளுடன் இறங்கிய பொதுமக்கள்
மும்பை: இப்போது என்ன தான் கூகுள்பே, போன்பே வந்தாலும் கூட இன்னுமே பல இடங்களில் கேஷ் தான் கிங்காக இருக்கிறது. இதனால் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதும் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி தான். ஆனால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்க, அந்த மிஷின் நீங்கள் கேட்டதை விட 5 மடங்கு அதிகமான பணத்தை வாரி வழங்கினால் எப்படியிருக்கும்? கேட்பதற்கே ஏதோ சினிமா படம் போலத் தெரிந்தாலும், அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
இந்தக் காலத்தில் எல்லாமே டெக் வளர்ச்சி என்றே இருக்கிறது. தொழில்நுட்பம் தான் தொடர்ச்சியாக நமது வாழ்க்கையை எளிமைப்படுத்தி இருக்கிறது. ஆனால், தொழில்நுட்பத்தில் தவறு நடக்காமல் இல்லை. அதில் ஏற்படும் சில தவறுகள் கூட மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஏஐ
அப்படியொரு வினோதமான சம்பவம் தான் மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிராவின் வசாயின் கோலானி நாகா பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு விசித்திரமான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த ஏடிஎம் மிஷின் தானாகவே மக்களுக்கு ஆஃபர் மழை பொழியத் தொடங்கியது!
5 மடங்கு
அதாவது அங்கு ஒருவர், ATMல் இருந்து ₹100 எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த ஏடிஎம் சுடச்சுட ஒரு ₹500 நோட்டை வெளியில் தள்ளியது. அதிர்ச்சியடைந்த அவர் தனது மொபைல் போனுக்கு வந்த எஸ்எம்எஸ் அலர்ட்டை சோதித்துப் பார்த்துள்ளார். ஆனால், அப்போது அவரது கணக்கிலிருந்து வெறும் ₹100 மட்டுமே கழிக்கப்பட்டு இருப்பதாக மெசேஜில் இருந்தது. இதேபோல் மற்றொரு நுகர்வோர் ₹400 எடுக்க முயல, அந்த ஏடிஎம் அவருக்கு ₹2,000ஐ வாரி வழங்கியது. ஆனால், அவரது கணக்கிலும் ₹400 மட்டுமே எடுக்கப்பட்டதாகக் காட்டியது.
உடனடியாக இந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவியது. அந்த ATMல் காசு அள்ளித் தர்றாங்கப்பா என்ற செய்தி அந்தப் பகுதி முழுவதும் சீக்கிரம் பரவியது. இதனால் நள்ளிரவு என்றும் பாராமல் ஏடிஎம் கியாஸ்க் முன்னால் ஒரு மிக பெரிய மக்கள் கூட்டம் அலைமோதியது. வந்தவர்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு கார்டுகளைச் செருகி, தங்களுக்குக் கிடைத்த பணத்தை அள்ளிக் கொண்டு சென்றனர்..
போலீஸ்
கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் இது தொடர்பாக உள்ளூர் போலீசாருக்கு சிலர் தகவல் அளித்தனர். இதையடுத்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். ATMஐ முற்றுகையிட்டிருந்த கூட்டத்தை லேசான தடியடி நடத்திக் கலைத்தனர். மேலும், உடனடியாக அந்த ஏடிஎம்-மின் செயல்பாடுகளை நிறுத்தி, வங்கித் தொழில்நுட்பக் குழுவினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தற்போது அந்த ஏடிஎம் மிஷின் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்போது ஏன் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது, தவறுதலாகப் பணம் எவ்வளவு விநியோகிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வங்கி அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் கிட்டத்தட்ட பணமழை கொட்டியது போலவே இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள்.
என்ன நடக்கும்!
பொதுவாக இது போன்ற சம்பவங்களில், கார்டு பரிவர்த்தனை டேட்டாவை வைத்து, கூடுதல் பணம் யாருக்கு எல்லாம் போனது என்பதை வங்கி நிர்வாகம் மிக எளிதாகக் கண்டறிந்துவிடும். எனவே, இலவசப் பணம் என்று நினைத்து அள்ளிச் சென்றவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து அந்த உபரித் தொகையை வங்கி மீண்டும் 'ரிவர்ஸ்' எடுத்துவிடும். அதாவது மிஷின் கொடுத்த மேஜிக் தற்காலிகமானது தான்!












Click it and Unblock the Notifications