தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி
டெல்லி: பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச முடியும் என்று பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பாகிஸ்தான் வழியாக செல்ல முதலில் பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கோரப்பட்டது. பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கிய பின்னர் இந்திய அரசு அதை மறுத்துவிட்டது.

பின்னர், நேற்று காலை மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்ட பிரதமரின் விமானம் ஓமன், ஈரான் வான் வழியாக பறந்து பிஷ்கெக் நகருக்கு சென்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் , சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மோடி சந்தித்து பேசவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசிய பிரதமர் மோடி பாகிஸ்தான் குறித்தும் பேசியுள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பேசிய மோடி, அந்நாட்டின் பயங்கரவாத செயல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், தங்களது நாட்டில் உள்ள தீவிரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீவிரவாத செயல்களை நிறுத்தினால் மட்டுமே இனி அந்நாட்டுடன் பேச முடியும் என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் சீனா - இந்திய உறவு குறித்துப் பேசுகையில் " இந்தியாவுடன் சீனா நெருக்கமான கூட்டணியை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளது. இணைந்து பணியாற்ற தயராக இருக்கிறது" என்றும் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications