மிக விரைவில் நடைபெறும் இந்தியா- சீனா அடுத்தகட்ட ராணுவ பேச்சுவார்த்தை.. ஏன் முக்கியம் தெரியுமா
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே இருந்து வந்தது.
அதிலும் கல்வான் மோதலுக்குப் பின்னர் இரு தரப்பிற்குமான உறவு மோசமானது. இதனால் எல்லையிலும் மிகவும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்க இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்தியா சீனாவும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளன. இரு தரப்பிற்கும் இடையே எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டத்தின் 24ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது.

எல்லை விவகாரம்
அப்போது இந்தியா சீன எல்லை நிலை ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எல்லையில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்ச்சியான ராஜதந்திர மற்றும் ராணுவ வழி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் இருதரப்பு உறவுகளில் இயல்புநிலையை மீட்டெடுக்க முடியும்.

முன்கூட்டியே
எல்லையில் மேற்கு செக்டரில் உள்ள வீரர்களை வாபஸ் பெறும் நடவடிக்கையில் பேச்சுவார்த்தையைத் தொடர இரு தரப்பு மூத்த ராணுவ தளபதிகள் (16வது) அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை முன்கூட்டியே நடத்த ஒப்புக்கொண்டனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 11ஆம் தேதி இரு தரப்பிற்கும் இடையே 15ஆவது பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.

சீனா
இதற்கிடையே சியோமி, ZTE, விவோ போன்ற இந்தியாவில் உள்ள சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது இரு தரப்பு உறவை மேலும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், "நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இந்திய அரசு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி செயல்பட வேண்டும். நியமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்களுக்குப் பாரபட்சமான வணிகச் சூழலை உருவாக்கக் கூடாது" என்று கூறி இருந்தார்.

மத்திய அரசு
கடந்த மார்ச் 25ஆம் தேதி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ டெல்லிக்கு வந்து இருந்த சமயத்திலும் இந்தியச் சீன எல்லை விவகாரம் தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "எல்லை விவகாரத்தைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. அது நாங்கள் எதிர்பார்த்ததைவிட மெதுவாகவே நடைபெறுகிறது. எல்லையில் இயல்புநிலையை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications