இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்!
டெல்லி: சர்வதேச சப்ளை செயினில் இந்தியா தன்னை ஒரு உற்பத்தி மையமாக மாற்ற முயன்று வருகிறது. ஆப்பிள் தொடங்கி பல்வேறு நிறுவனங்களும் அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்கி வருகிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சீனா இப்போது ஒரு சர்ச்சை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, சீனாவிற்கு மாற்றாகச் சர்வதேச உற்பத்தி மையமாக இந்தியா தன்னை முன்னிறுத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர்கள் இந்தியாவில் தங்களின் ஆலைகளை விரிவாக்கம் செய்தது.. மேலும், செமிகண்டக்டர் திட்டங்கள் மற்றும் புதிய தொழில் பூங்காக்களின் வருகை ஆகியவை இதற்குச் சான்றுகளாக உள்ளன.

இந்தியா
இதன் விளைவாக, இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி கடந்த 2015-ல் $8.6 பில்லியன் டாலராக இருந்தது, 2025ல் $47 பில்லியன் டாலராக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு 2026ம் ஆண்டு இறுதிக்குள் இதனை $120 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்தியா உற்பத்தியில் பாய்ச்சலை நிகழ்த்த நினைக்கும் அதே வேளையில், அதற்குத் தேவையான மூலப்பொருட்களின் சப்ளை செயினை சீனா தனது புதிய உத்தரவுகள் மூலம் முழுமையாக லாக் செய்துள்ளது இந்தியத் தொழில்துறையினரிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா
சீன அரசு அண்மையில் பிறப்பித்துள்ள புதிய ஸ்டேட் கவுன்சில் ஆணைகள் மூலமாக, அத்தியாவசிய இயந்திரங்கள் மற்றும் உதிரிப் பாகங்களின் ஏற்றுமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், சீனாவை நம்பியிருக்கும் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் விரிவாக்கத் திட்டங்கள் தள்ளிப்போகும் அபாயம் எழுந்துள்ளது. தொழிற்சாலைகளைக் கட்டமைப்பதற்கான கருவிகளைச் சீனா கட்டுப்படுத்தும் நிலையில், அது இந்தியாவுக்குச் சிக்கலை உருவாக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய நவீன கார்களில் கிட்டத்தட்ட 3,000 சிப்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகளால் கார் உற்பத்திச் செலவு உயர்வது மட்டுமன்றி, புதிய மாடல்களின் அறிமுகம் தாமதமாதல் மற்றும் வாகனங்களுக்கான வெயிட்டிங் பீரியட் அதிகரிப்பது போன்ற சிக்கல்கள் ஏற்படும்.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "சீனாவின் புதிய சப்ளை செயின் உத்தரவின்படி, தங்களின் உற்பத்தியைச் சீனாவிற்கு வெளியே மாற்ற நினைக்கும் நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகளைத் தனிப்பட்ட முறையில் தண்டிக்கும் அதிகாரத்தை அந்நாட்டு ஒழுங்குமுறை அமைப்புகளுக்குச் சீனா வழங்கியுள்ளது. இது வெறும் வர்த்தக உத்தி அல்ல, ஒரு மிரட்டல்" என்றார். கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோ உதிரிப்பாகங்கள் இறக்குமதியில் 26 சதவீதம் சீனாவிலிருந்து மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஆசியாவில் வெடித்துள்ள ஈரான் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழல், உள்நாட்டில் விவசாய வருவாயை அச்சுறுத்தும் 'எல் நினோ' விளைவு என இந்தியா ஏற்கனவே பலமுனை நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், செமிகண்டக்டர்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தாதுக்கள் மற்றும் அட்வான்ஸ் தொழில்நுட்ப ஏற்றுமதியைச் சீனா முடக்கியிருப்பது இந்திய நிறுவனங்களுக்குப் பெருத்த பின்னடைவாகும்!
பலப்படுத்த வேண்டும்
இது தொடர்பாக என்எக்ஸ்டிசெல் மொபிலிட்டியின் சிஇஓ அதுல் விவேக் மேலும் கூறுகையில், "இந்திய எலக்ட்ரானிக்ஸ் துறை இன்னும் உலகளாவிய சப்ளை செயினையே நம்பியுள்ளது. நிலையான வளர்ச்சிக்கு உள்நாட்டு சப்ளையர்களின் நெட்வொர்க்கை பலப்படுத்துவதே ஒரே வழி" என்றார்.
சீனாவின் இந்தப் பொருளாதாரச் செக்கிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை அன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது குறிப்பிட்ட சில நாடுகளை (சீனாவை) மட்டுமே சார்ந்து வாழும் நிலையை மாற்ற, துறை வாரியான புதிய முதலீட்டுத் திட்டங்களை அரசு தயார் செய்து வருகிறது.
இந்தியாவின் திட்டம்
இந்தியாவின் உள்கட்டமைப்பைப் பலப்படுத்த 'பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா' என்ற ₹33,660 கோடி மதிப்பிலான திட்டத்தின் கீழ், அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 50 புதிய தொழில் பூங்காக்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியா வெறும் அசெம்பிளி (Assembly) செய்யும் நாடாக மட்டும் இருக்கக் கூடாது.. சொந்தமாக உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நீண்டகாலத் தொழில்நுட்பத் திறனை வளர்க்க வேண்டும் என்பதே இப்போது பலரின் கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications