பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் மீட்டிங்.. சீனா சொன்ன அந்த விஷயம்.. உடனடியாக மறுத்த இந்தியா! என்னாச்சு
டெல்லி: 'பிரிக்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடந்த சந்திப்புகள் குறித்து இரு மாறுபட்ட தகவல்களை இந்தியா மற்றும் சீனா வெளியிட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் கொண்ட அமைப்பு தான் 'பிரிக்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இந்த 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள பிரிக்ஸ் நாட்டின் தலைவர்கள் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தனர். இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இந்தியா- சீனா எல்லையில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பாத நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சந்திப்பு: இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்தச் சந்திப்பு தொடர்பாகச் சீனா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு இந்தியா முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடந்த மோடி- ஜின்பிங் சந்திப்பு என்பது இந்தியாவின் கோரிக்கை அடிப்படையில் நடந்ததாகச் சீனா கூறிய நிலையில், அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது தொடர்பாகச் சீனாவின் நம்மிடம் வைத்த கோரிக்கை தான் நிலுவையில் இருப்பதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டது எதிர்பாராத ஒன்று என்றும் இது ஒரு கேஷ்வல் மீட்டிங் என்றும் இந்தியா விளக்கம் கொடுத்துள்ளது.
சீனா சொல்வது என்ன: முன்னதாக இந்த மீட்டிங் தொடர்பாகச் சீனா வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.. அதில், "கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் அவரை சந்தித்தார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 2020இல் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு அமைதியைக் கொண்டு வர இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் ஒப்புக் கொண்டனர்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்தியாவின் விளக்கம்: இதற்குத் தான் இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், "பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் இடையே உரையாடல் நடைபெற்றது. இதில் இந்தியச் சீன எல்லையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கவலைகளைப் பிரதமர் எடுத்துரைத்தார். இருப்பினும், இது தற்செயலாக நடந்த சந்திப்பு தானே தவிர திட்டமிட்டு நடந்த சந்திப்பு இல்லை" என்றார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பல காலமாகவே சுமுகமான சூழல் இல்லை. அதேநேரம் கடந்த 2020இல் ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமானது. இந்தச் சூழலில், தான் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தது சர்வதேச அளவில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்தச் சந்திப்பு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பெயரில் நடந்ததாகச் சீனா சொன்ன நிலையில், அதைத் தான் இந்தியா இப்போது மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications