பாக். உறவை புதுப்பித்து அமெரிக்கா சேட்டை..மத்திய பாஜக அரசின் ரஷ்யா ஆதரவு நிலைக்கு எதிராக ஆக்ரோஷமாம்!
டெல்லி: பாகிஸ்தானுடன் அறுந்து போன உறவைப் புதுப்பித்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அமெரிக்கா அதிதீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் யுத்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு நிற்பதால் அமெரிக்கா கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதன் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. தெற்காசிய மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியங்களில் அமெரிக்காவின் நட்பு சக்திகளில் இந்தியாவுக்கு முதன்மை இடம் இருக்கிறது. ஜி2-, குவாட், இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பு என பல்வேறு அமைப்புகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்தே செயல்பட்டு வருகின்றன.

பாக்- அமெரிக்கா உறவு
அதேநேரத்தில் பாகிஸ்தானுடனான அமெரிக்கா உறவையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உறவு வலுப்படுவதற்கு முன்பு வரை, பாகிஸ்தானுக்கு நிழலாக இருந்தது அந்நாடு. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் பாகிஸ்தானுக்கான ராணுவ, நிதி உதவி என அத்தனையையும் நிறுத்தி அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் ஆயுத சேட்டைகள் அடங்கியே இருந்தன.

உக்ரைன் யுத்தமும் இந்தியா-ரஷ்யா-அமெரிக்காவும்
இப்போது நாம் மேலே குறிப்பிட்ட நிலைமைகள் தலைகீழாக மாறத் தொடங்கிவிட்டன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தில் இந்தியா ரஷ்யா பக்கம் நின்றது. என்னதான் இது போருக்கான காலகட்டமல்ல என்று ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி அட்வைஸ் செய்தாலும் ரஷ்யாவுடனான நட்புறவை கைவிட்டுவிடவில்லை இந்தியா. ரஷ்யாவை உக்கிரமாக அமெரிக்கா எதிர்த்தாலும் இந்த விவகாரத்தில் இந்தியா எதிர்துருவத்தில்தான் நிற்கிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அடம்பிடித்து பார்த்த அமெரிக்காவுக்கு இந்தியா நோ சொன்னது. இப்படி ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்காவுடன் மத்திய பாஜக அரசு மோதி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிராக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறது அமெரிக்கா.

அமெரிக்கா- பாகிஸ்தான் உறவு
இன்னொரு பக்கம், பாகிஸ்தானுடனான நட்புறவு இப்போது அமெரிக்காவுக்கு தேவையானதாக இருக்கிறது. ஆப்கானை விட்டு வெளியே போனாலும் தலிபான்களை கண்காணிக்கும் கங்காணி வேலைக்கு பாகிஸ்தான் தேவைப்படும் என கருதுகிறது அமெரிக்கா. தெற்காசியாவில் இந்தியா வலிமையாக நிற்கும் வரை இந்தப் பிராந்தியத்தில் காலூன்றுவது கனவாகத்தான் இருக்கும் என்பது அமெரிக்காவுக்கு தெரியும். இலங்கையில் காலூன்றி நிற்க 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடுகிறது அமெரிக்கா. ஆனால் இந்தியாதான் கடுமையாக எதிர்த்து நிற்கிறது. இதனால் இந்தியாவுடன் உறவாடிப் பார்த்தது அமெரிக்கா. ஆனாலும் இந்த உறவும் ஆக்கப்பூர்வமானதாக இல்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் பாகிஸ்தானுடனான முறிந்து போன நட்பை புதுப்பித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது அமெரிக்கா.

அமெரிக்காவின் அடேங்கப்பா கரிசனைகள்
இதனையடுத்துதான் பாகிஸ்தானுக்கு எப்.16 ரகபோர் விமானங்களுக்கான உதிரி பாகங்களை வழங்குவோம் என்றது அமெரிக்கா. 1980களில் அமெரிக்காதான் இந்த போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தது. அணுகுண்டு தாக்குதல் நடத்துகிற வல்லமை கொண்டது இந்த எப்.16 போர் விமானங்கள். இப்போது திடீரென எப்.16 ரக விமானங்களுக்கு உதிரி பாகங்களை வழங்குவோம் என அமெரிக்கா அறிவித்ததை இந்தியா கடுமயாக எதிர்த்தது. ஆனாலும் அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை.

பாகிஸ்தானுக்கு செல்லம் கொடுக்கும் அமெரிக்கா
இதன்பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகள் அமெரிக்கா சென்றனர். அவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா அமெரிக்கா சென்றார். அவருக்கு நட்பு நாடுகளின் ராணுவ தளபதிகளுக்கு வழங்கப்படுகிற சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது அமெரிக்கா. அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் Lloyd Austin- உடன் பாஜ்வா ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலை குறித்து விவாதித்தோம் என அறிக்கை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்தியாவின் காஷ்மீர் பிராந்தியத்துக்கு பாகிஸ்தானுக்கான அமெரிக்கா தூதர் அண்மையில் சென்றிருந்தார். இப்படி ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை செல்லப் பிள்ளையாக மீண்டும் தத்தெடுத்து ஊட்டி வளர்க்கிறது அமெரிக்கா. இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என எச்சரிக்கின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications