பாகிஸ்தானுக்கு அடுத்த அடி..பாக்., தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு! மத்திய அரசு அதிரடி
டெல்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசார ரத்து செய்யப்பட்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தீவிரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில் அதனை இந்தியா முறியடித்தது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள், விமானப்படைத்தளங்கள் கடும் சேதமடைந்துள்ளன.

தொடர்ந்து இரு நாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் விசா, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்போதைக்கு எல்லையில் பதட்டம் இல்லாமல் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை ஐம்பதில் இருந்து 35 ஆக மத்திய அரசு குறைத்து அதிரடி காட்டியது. இந்த நிலையில் அடுத்த அதிரடி நடவடிக்கையாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதராக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு அவர் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. தூதரக நடவடிக்கை அல்லாத வேறு செயல்களில் அந்த அதிகாரி ஈடுபட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் அந்த அதிகாரி யார் பெயர் அவர் வகித்து வந்த பொறுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் வெளியாகவில்லை.
இந்தியாவின் உத்தரவில் பாகிஸ்தான் அதிகாரி இந்தியாவால் Persona Non Grata என அறிவிக்கப்பட்டு, 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. Persona Non Grata என்பது லத்தீன் மொழியில் 'வரவேற்கப்படாத நபர்' என்று பொருள்படும் சொல் ஆகும். ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடும் மிகக் கடுமையான அரசியல் நடவடிக்கை என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். 1961 ஆம் ஆண்டின் வியன்னா உடன்படிக்கையின் 9வது விதியின் கீழ், எந்த நேரத்திலும், எந்த விளக்கமும் இல்லாமல் ஒரு நாட்டின் அதிகாரியை Persona Non Grata என அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications