அமெரிக்காவில் இருந்து 1000 டோஸ் ரெம்டெசிவிர் மருந்து இந்தியா வந்தது! இந்தியாவில் தயாராகுமா பரபரப்பு?
டெல்லி: கொரோனா நோய்த்தொற்று சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக கூறப்படும் 'ரெம்டெசிவிர்' மருந்து 1,000 டோஸ்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல்வேறு நாடுகளை மோசமாக பாதித்துள்ளது. சுமார் 35 லட்சம் பேர் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்னும் லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த புதிய வைரஸான கோவிட் 19 என்ற இந்த கொரோனா வைரஸ்க்கு இதுவரை உலகில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.

விரைவில் குணம்
இந்நிலையில் 'ரெம்டெசிவிர்' என்ற வைரஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஏஐடி) கிளினிக்கல் டிரையலில் வைத்து பரிசோதித்து பார்த்தது. பிளேசிபோ மருந்து கொடுக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுடன் ஒப்பிடுகையில், "ரெம்டெசிவிர்' மருந்து கொடுக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்ததாக கூறப்பட்டது. முன்னதாக இதே 'ரெம்டெசிவிர்' மருந்தை எபோலா, ஹெபாடிட்டிஸ் நோய்க்கு கொடுத்து பார்க்கப்பட்டது. ஆனால் நோயாளிகளை குணப்படுத்துவதில் தோல்வியை சந்தித்தது.

'ரெம்டெசிவிர்' மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு
சி.எம்.ஐ.ஆர்-ஐ.ஐ.சி.டி (கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி) மூலம் ரெம்டெசிவிரின் முக்கிய மூலப்பொருட்களின் (கே.எஸ்.எம்) தொகுப்பு அடையப்பட்டுள்ளது என்றும், இந்தியத் தொழில்துறை இதை தயாரிக்க ஆயத்தமாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

அமெரிக்கா காப்புரிமை
ஆனால், எந்த நிறுவனமும் மூலக்கூறு (கே.எஸ்.எம்)யை வைத்து மருந்து தயாரிக்காது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் ரெம்டெசிவிருக்கான காப்புரிமையை அமெரிக்காவைச் சேர்ந்த "கிலியாட் சைன்சஸ்' நிறுவனம் வசம் உள்ளது.இந்த நிறுவனம் விரைவில் ஏதேனும் இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியாவில் "ரெம்டெசிவிர்' மருந்தை தயாரிக்கும் என தெரிகிறது.

எப்போது தயாரிப்பு
இதற்கிடையே சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் சேகர் மண்டே இதுபற்றி கூறும் போது "ரென்டெசிவிர் மருந்தை இந்திய சந்தைக்கு கொண்டுவருவது தொடர்பாக கிலியாட் சைன்சஸ் நிறுவனம் தான் முடிவு செய்யும். இந்தியாவில் சர்வதேச காப்புரிமையை பெறுவதற்கு "கட்டாய உரிமம்', "விருப்ப உரிமம்' என இரு முறைகள் உள்ளது. எனினும், இதுதொடர்பான முடிவு அந்த நிறுவனம் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையை பொருத்துதான் அமையும்' என்றார்.
Recommended Video

வந்தது 1,000 டோஸ்கள்
கிலியாட் சைன்சஸ் நிறுவனத்தின் தலைர் டேனியல் ஓடே கடந்த வாரம் இதுபற்றி கூறும் போது , "ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சர்வதேச அளவுக்கு விரிவுபடுத்துவதற்காக மருந்து தயாரிப்பாளர்களின் சர்வதேச கூட்டமைப்பை ஏற்படுத்த முயன்று வருகிறோம், போதிய அளவு மருந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கு உலக நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றார். இதற்கிடையே இந்த வாரத்திற்குள் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு கிடைக்கும் என்று கிலியாட் சைன்சஸ் அண்மையில் கூறியிருந்தது. இதையடுத்து தற்போதைய நிலையில் முதற்கட்டமாக 'ரெம்டெசிவிர்' மருந்து 1,000 டோஸ்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications