8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை! கத்தார் நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியா அதிர்ச்சி
டெல்லி: வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது.

இவர்கள் 8 பேரும் கத்தார் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக கத்தார் அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுடைய கைது குறித்து கத்தார் அரசு எந்த அறிக்கையையும் இந்திய அரசுக்கு அனுப்பவில்லை என தெரிகிறது.
அவர்களுடைய குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் அவர்களை மீட்க இந்திய அரசு சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உளவு பார்த்ததாக 8 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு கத்தார் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வந்தது. இந்த வழக்கின் 7ஆவது விசாரணை கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடந்தது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இந்த 8 பேரையும் கத்தாருக்கான இந்திய தூதர் சந்தித்து பேசினார். அவர்களை தாயகத்திற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அவர்கள் 8 பேர் மீது உளவு பார்த்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இதன் விசாரணைகள் முடிவடைந்து இந்த மாத இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் கத்தார் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கும் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தகவல் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த 8 பேரின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களை விடுவிக்க தேவையான சட்ட உதவிகளை செய்வோம். கத்தார் அதிகாரிகளுடன் இந்த தீர்ப்பு குறித்து முறையிடுவோம். இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த 8 பேர் மீதும் எந்தெந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களை கத்தார் அரசு இந்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட அந்த 8 பேரின் பெயர்கள்- கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் ஆவர். இவர்கள் தோஹாவில் உள்ள சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications