"இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை.." நாடாளுமன்றத்தில் திடீரென சீறிய அமித் ஷா.. என்ன மேட்டர்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது மத்திய அரசு, குடியேற்றம் தொடர்பான முக்கிய மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை என்றும் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இப்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு சில முக்கிய மசோதாக்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் குடியேற்றம் தொடர்பாக முக்கிய மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 தொடர்பான விவாதத்தில் பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

அமித் ஷா
இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது கல்வி, சுகாதாரம் மற்றும் வணிகத்திற்காகவோ வர விரும்புவோரை வரவேற்க அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அதேநேரம் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தத் திட்டமிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தவறான நோக்கங்களுக்காக இந்தியா வருவோரை மட்டுமே மோடி அரசு தடுக்கும் எனக் கூறிய அமித் ஷா, இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை என்றும் தெரிவித்தார்.
சத்திரம் இல்லை
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாடு ஒன்றும் சத்திரம் இல்லை. அதேநேரம் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க யாராவது நாட்டிற்கு வந்தால், அவர்கள் எப்போதும் வரவேற்கப்படுவார்கள். இப்போது முன்மொழியப்பட்ட சட்டம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும்.. பொருளாதாரம் மற்றும் வணிகத்தை மேம்படுத்தும்.. சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை ஊக்குவிக்கும். இந்த புதிய குடியேற்ற மசோதா இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டினரைப் பற்றிய புதிய தகவல்கள் நமக்குக் கிடைப்பதை உறுதி செய்யும்.
கடுமையான நடவடிக்கை
மியான்மர் ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக ஊடுருவுவது தொடர்ந்து பிரச்சினையாக இருந்து வருகிறது. தனிப்பட்ட ஆதாயத்திற்காக இதுபோல இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நாடு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. ஊடுருவல்காரர்கள் இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மசோதா நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும். 2047ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகவும் வளர்ந்த நாடாக இந்தியா மாற உதவும். இதன் சட்டத்தின் மூலம் நமது நாட்டிற்குள் வரும் அனைத்து வெளிநாட்டினர் குறித்த புது தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
அச்சுறுத்தலைக் கண்காணிப்போம்
சுற்றுலாப் பயணிகளாக, கல்விக்காக, சுகாதாரத்திற்காக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக, வணிகத்திற்காக இந்தியாவுக்கு வர விரும்பும் அனைவரையும் நான் வரவேற்கிறேன். ஆனால் நாட்டிற்கு அச்சுறுத்தலாக வருபவர்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
புதிய சட்டம் சொல்வது என்ன
இந்த புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவின்படி, போலி பாஸ்போர்ட் அல்லது விசாவைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைவது அல்லது நாட்டில் தங்குவது கண்டறியப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், வெளிநாட்டினரைப் பற்றிய தகவல்களை ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் கட்டாயமாகப் பகிர வேண்டும் என்பதையும் இந்த சட்டம் உறுதி செய்கிறது. இதன் மூலம் வெளிநாட்டினர் விசா காலத்தைத் தாண்டி தங்கியிருப்பதைக் கண்காணிக்க முடியும்.












Click it and Unblock the Notifications