ஊழல் செய்தவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள்.. வலுவான அரசு தேவை.. குட்டு வைத்த பாஜக எம்.பி. வருண்காந்தி
டெல்லி: ஊழலுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கும் வலுவான அரசாங்கம் தேவை என பாஜக எம்.பி வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
வருண் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது மத்திய அரசாங்கத்தையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறார் வருண் காந்தி.
லக்கிம்பூர் சம்பவத்துக்குப் பிறகு பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மற்றும் அவரது மகன் வருண் காந்தி இருவரும் நீக்கப்பட்டனர். புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் இருவரின் பெயரும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

வருண் காந்தி
வருண் காந்தி தன்னுடைய ட்விட்டரில், ''பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையாவுக்கு 9000 கோடியும், நிரவ் மோடிக்கு 14 ஆயிரம் கோடியும், ரிஷி அகர்வால் மீது 23 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததும் நிலுவையில் உள்ளது.
இன்றைக்கு நாட்டில் கடன் சுமையால் தினமும் சுமார் 14 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் போது, அப்படிப்பட்ட பண விலங்குகளின் வாழ்வு உச்சத்தில் இருக்கிறது. இந்த அதி ஊழல் அமைப்புக்கு எதிராக ஒரு வலுவான அரசாங்கம் 'வலுவான நடவடிக்கை' எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என தெரிவித்துள்ளார்.

பாஜக
பாஜக எம்.பி-யாக இருந்தும்,கடந்த ஓராண்டாக பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் வருண் காந்தி. வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு, இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால், இவ்வளவு பேர் இறந்திருக்கமாட்டார்கள் என பாஜகவை சாடினார். அதேபோல் லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசை வலியுறுத்தினார். இதனால் பாஜக இவர் மீது அதிருப்தியில் இருந்தது.

லக்கிம்பூர்
லக்கிம்பூர் சம்பவத்தை தொடர்ந்து, வருண் காந்தி ட்வீட் செய்தார். அதில், ''லக்கிம்பூரில் எடுக்கப்பட்ட வீடியோ மிகத் தெளிவாக இருக்கிறது. கொலை மூலம் போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமானவர்களை நீதி முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார்.

நீக்கம்
இதையடுத்து பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மற்றும் வருண் காந்தி இருவரும் நீக்கப்பட்டனர். புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் இருவரின் பெயரும் இல்லை. இதனால் பாஜக மீது வருண் காந்தி அதிருப்தியில் இருந்தார். இதைத் தொடர்ந்து சமீபகாலமாக ஒவ்வொரு விஷயத்திலும் பாஜகவை விமர்சித்து வருகிறார் வருண் காந்தி.












Click it and Unblock the Notifications