சீனாவை நம்பினால் அவ்வளவுதான்.. மத்திய அரசுக்கு போன வார்னிங்.. பொருளாதார ஆய்வறிக்கையின் பின்னணி
டெல்லி: இந்தியா தனக்கு தேவையான பொருட்களை பெற சீனாவை சார்ந்து இருக்க கூடாது என்று சோலார் துறையை குறிப்பிட்டு பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டில் முதல் முதலாக நாடாளுமன்றம் கூடும்போது ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு சிறப்புரையாற்றினார்.

அதன்பிறகு இரு அவைகளிலும் 2024-25ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அந்த வகையில் 2025-26ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் மற்றும் அவரது குழுவினர் முக்கிய பரிந்துரையை வழங்கி உள்ளனர். அதாவது இந்தியா சீனாவை சார்ந்து இருக்க கூடாது. நமக்கு தேவையான பொருட்களை பெற சீனாவை சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டும்.
சீனாவை சார்ந்து இருப்பதால் சில முக்கிய பிரச்சனைகள் வரலாம். சப்ளை செயின் பாதிப்பு, விலையில் ஏற்றம் இறக்கம் மாறி மாறி வருவது, நாணயத்தின் மீதான நிலையற்ற தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். நம் நாட்டின் சோலார் துறை என்பது சீனாவை சார்ந்து உள்ளது.
இதனை தவிர்க்க முதலீடுகளை ஈர்க்க வேண்டும். போட்டி மிகுந்த இந்த காலக்கட்டத்தில் புதுமையான பொருளாதாரம் கொண்ட நாடாக மாற நம் நாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இப்படி செய்வது என்பது உள்நாட்டில் தொழில்களை ஊக்கப்படுத்தி வலுப்படுத்த முடியும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதை குறைக்க முடியும்.
நம் நாட்டில் கட்டுமான துறை என்பது நல்ல வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்கும் துறையாக இந்த துறை ஜொலிக்கிறது. கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையை ஒப்பிடும்போது 2021ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து கட்டுமான துறை 15 சதவீதம் வரை வளர்ந்துள்ளது. இது உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வலுவான உந்துதலை எடுத்துக்காட்டுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications