இந்தியாவில் கொரோனா பாதிப்பு புது உச்சம்.. சமூக பரவலாக மாறவில்லை.. அடித்துச் சொல்கிறது ஐசிஎம்ஆர்
டெல்லி: இந்தியாவில், கொரோனா, சமூக பரவல் கட்டத்தை எட்டவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்).
ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா, இதுபற்றி கூறுகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 83 மாவட்டங்களில் 0.73 சதவீத மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

15 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா சமூக பரவல் நிலையில் இல்லை. கொரோனாவை சமாளிக்க கண்டறிதல், சோதனை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவைதான் முக்கியம். நமது பாதுகாப்பை விட்டுவிடக்கூடாது.
ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு இந்தியாவின் இறப்பு விகிதம் 0.59 ஆகும், இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும். ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு இந்தியாவின் பாதிப்பு நிலவரம், 20.77 ஆகும். இது உலகிலேயே மிகக் குறைவானதாகும். உலகின் சராசரி 91.67 ஆகும்.
மக்களிடையே கொரோனா பரவுவதை மதிப்பிடுவதற்காக ஐ.சி.எம்.ஆர் நாடு முழுவதும் ஒரு செரோ-கணக்கெடுப்பை நடத்தியது. 80 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக, 9,996 கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. மேலும், 357 நோயாளிகள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.
மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.86 லட்சம் கேஸ்களாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக தினசரி, 9,000 க்கும் மேற்பட்ட கொரோனா கேஸ்கள் பதிவாகும் நிலையில், ஐசிஎம்ஆர் இவ்வாறு ஒரு தகவலை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications