இது எங்க ஏரியா..உள்ள வராதீங்க! காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்! படாரென பேசிய இந்தியா
டெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்யஸ்தம் பேச தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டு தலையீட்டை இந்தியா ஏற்காது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச வேண்டிய ஒரே விஷயம், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகள் மீட்கப்படுதல் மற்றும் பயங்கரவாதிகளை இந்தியா ஒப்படைப்பது மட்டுமே எனவும் மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில தினங்களாக நேரடியாக மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் செவ்வாய் கிழமையில் இருந்து பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்தியா தரப்பிலும் கடும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
பகல் நேரங்களில் அமைதியாக இருக்கும் பாகிஸ்தான் ராணுவம், இரவு நேரங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்து இருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் கடும் பதற்றம் நிலவிய நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இருநாட்டு அதிகாரிகளும் கூறினர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே இது நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக டொனால்ட் டிரம்ப் முன்னரே கூறியது எப்படி என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இந்த நிலையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது டொனால்ட் டிரம்பின் பேச்சு. ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்," ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில் தீர்வினை எட்ட முடியுமா என்பது தொடர்பாக இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன் . சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைக்கு கடவுள் அருள் புரியட்டும்" எனக் கூறியிருந்தார்.
அவரது பேச்சை வரவேற்றுள்ள பாகிஸ்தான், இந்தியா பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்தை பாகிஸ்தான் வரவேற்பதாகவும், ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கான எந்த ஒரு நியாயமான நீண்ட காலத்திற்கும் ஐநா சபையின் தீர்மானத்தின்படி இருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென கூறி இருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா தனது கருத்தை தெரிவித்து இருக்கிறது
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்யஸ்தம் பேச தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டு தலையீட்டை இந்தியா ஏற்காது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றால், அது பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அதே நேரத்தில், வேறு எந்த நாடும் இந்த விவகாரத்தில் தலையிட இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் விநியோகம் நிறுத்தம் என்ற உத்தரவு தொடர்ச்சியாக அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் நிறைவுக்கு வரவில்லை. பாகிஸ்தான் மீண்டும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால், இந்திய முப்படைகள் முழு வீச்சில் பதிலடி கொடுக்கும். பாகிஸ்தான் தொடர்பான அனைத்து விவகாரங்களும் நேரடி பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்மானிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications