பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பா? பாகிஸ்தானை விளாசிய வெளியுறவுத்துறை
டெல்லி: பாகிஸ்தானின் வசிரிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஹபிஸ் குல் பகதூர் குழு பொறுப்பேற்றுள்ள நிலையில் அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதனை மறுத்துள்ளதோடு பாகிஸ்தானை விளாசி உள்ளது.
பாகிஸ்தான் எப்படி நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறதோ.. அதேபோல் தான் இன்னொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் மல்லுக்கட்டி வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள், அங்கு செயல்படும் போராளி அமைப்புகளுடன் பாகிஸ்தான் ராணுவம் மோதி வருகிறது.

குறிப்பாக தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்புக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. இதுதவிர பலுசிஸ்தான் மாகாணத்திலும் சண்டை நடந்து வருகிறது. இதுதவிர தாலிபான் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாட்டின் பிற இடங்களிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் வசிரிஸ்தான் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் ‛கான்வே' சென்று கொண்டிருந்தது. அப்போது வெடிப்பொருட்களை ஏற்றி கொண்டு லாரியில் வந்த ஒருவர் அந்த லாரியை அவர்களின் ‛கான்வே' மீது மோதினார். இதையடுத்து வெடிப்பொருட்கள் வெடித்து 13 ராணுவ வீரர்கள் பலியாகினர். அதேபோல் 10 வீரர்கள் உள்பட மொத்தம் 29 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்களின் ‛கான்வே' மீது நடத்தி 40 வீரர்கள் இறந்த சம்பவம் போல் நடந்தது. பாகிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பகதூர் குழு பொறுப்பு ஏற்றது. இந்த குழு என்பது தெஹ்ரீக் ஐ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பின் ஒரு பிரிவாகும்.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை குற்றம்சாட்டியது. இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா உள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு மத்திய வெளியுறவு விவகாரத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வமான அறிக்கையை பார்த்தோம். அதில் இன்று நடந்த வசிரிஸ்தான் தாக்குதலில் இந்தியாவை குற்றம்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரிக்கிறது. அதோடு கண்டிக்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications