காலநிலை மாற்றத்திற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பு! இந்தியாவை நினைத்தா பெருமையாக உள்ளது! பிரதமர் மோடி
டெல்லி: பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு புறக்கணிக்கத்தக்க அளவில் இருந்தாலும் கூட சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என பெருமையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் துகள்கள் அதிகளவில் வெளியேற்றுவதற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பு என குற்றம்சாட்டினார்.
கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு. இவர் ‛மண்காப்போம்' இயக்கத்தையும் நடத்தி வருகிறார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயக்கத்தின சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மேலும் மண்ணை பாதுகாப்பது தொடர்பாக மோட்டார் சைக்கள் ஊர்வலமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி டெல்லி விஞ்ஞான் பவனில் ‛மண்காப்போம்' இயக்கம் சார்பில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி
இந்தியாவின் பல அரசு திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் தூய்மை இந்தியா, நமாமி கங்கை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா தொடர்ந்து பல முயற்சிகள் செய்து வருகிறது.

வளர்ந்த நாடுகளே பொறுப்பு
இந்தியா சுற்றுச்சூழலுக்கு சாதகமான எரிபொருள் பயன்பாட்டில் ஆர்வம் காட்டி வருகிறது. பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்புக்கான இலக்கை 5 மாதத்துக்கு முன்பே இந்தியா எட்டிவிட்டது. இது இன்னும் தீவிரமாக செயல்படுத்தப்படும். மேலும் அதிக கார்பன்(கரியமிலவாயு) வெளியேற்றத்துக்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பாகும்.

புறக்கணிக்கத்தக்க அளவில்...
உலகளாவிய பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு என்பது மிகமிக குறைவு அதாவது புறக்கணிக்கத்தக்க அளவில் இருந்தாலும் கூட சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் திட்டங்களானது பல்லுயிர் அதிகரிப்பு மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது. இதன்மூலம் காடுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

மண்வள அட்டை
இதற்கு முன்பு நம் விவசாயிகளுக்கு மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. இதனை தடுக்கும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கும் பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட்டில் கூட கங்கை கரையில் இயற்றை விவசாயத்தை அறிமுகம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது'' எனக்கூறினார்.












Click it and Unblock the Notifications