இந்தியாவின் முதல் பெண் இதய சிகிச்சை நிபுணர் பத்மாவதி கொரோனாவால் மறைந்தார்!
டெல்லி: இந்தியாவின் முதல் பெண் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பத்மாவதி கொரோனா வைரஸால் மரணமடைந்தார். அவருக்கு வயது 103.
பத்மாவதி 1917-ஆம் ஆண்டு அன்றைய பர்மா, தற்போதைய மியான்மரில் பிறந்தார். அவர் ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பின்னர் அவர் இதய சிகிச்சை துறையில் பட்டமும் பெற்றார்.

இவர் தான் படித்த ரங்கூன் கல்லூரியிலேயே பணியாற்றி வந்தார். 1967 ஆம் ஆண்டு மவுலாநா மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் மற்றும் முதல்வராக பொறுப்பேற்றார். இங்கு இதய சிகிச்சைக்கு ஒரு தனித்துறையை உருவாக்கினார்.
பின்னர் இதய சிகிச்சைத் துறையில் டிப்ளமோ படிப்பை தொடங்கினார். அது போல் முதல் இதய சிகிச்சை பிரிவை இந்தியாவில் தொடங்கினார். அவர் 1954ஆம் ஆண்டு லேடி ஹார்டிஞ்ச் மருத்துவக் கல்லூரியில் வட இந்தியாவின் முதல் கார்டியாக் கேதரைசேஷன் லெபராட்டரியை தொடங்கினார்.
அவர் அனைவருக்கும் ரோல் மாடலாக இருந்தார். அவருக்கு 1967-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் ஹார்வார்டு மெடிக்கல் இன்டர்நேஷனல், டாக்டர் பி சி ராய், கமலா மேனன் ரிசர்ச் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. 1981-ஆம் ஆண்டு தேசிய இதய சிகிச்சை நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிலையில் பத்மாவதிக்கு கடந்த 11 நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதித்தது. அவரது நுரையீரலில் தீவிர தொற்று ஏற்பட்டது. அவர் தேசிய இதய சிகிச்சை நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் மேற்கு டெல்லியில் பஞ்சாபி பாக் இடுகாட்டில் நடத்தப்படும். இவர் கொரோனா பாதிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் வரை சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். 2015 வரை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பணியாற்றுவார்.
தேசிய இதய சிகிச்சை நிறுவனத்தில் வாரத்தில் 5 நாட்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார். சிறந்த ஆசானாக இருந்தார் என அவரிடம் படித்த மற்றும் பணியாற்றிய மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.












Click it and Unblock the Notifications