இந்தியாவில் அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம்.. கிராமங்களை விட நகரங்கள் ரொம்ப மோசம்.. ஷாக் தகவல்
டெல்லி: இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 16 மாதங்களில் இல்லாத வகையில் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த நவம்பரில் 8 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம் டிசம்பர் மாதத்தில் 8.30 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) சார்பில் ஷாக் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் படித்தவர்கள் சரியான வேலையின்றி சிரமப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. இருப்பினும் கூட பலரும் தங்களின் படிப்புக்கு ஏற்றது கிடைக்காவிட்டாலும் வேறு ஏதேனும் பணியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் இந்தியாவில் வேலையில்லா திண்ட்டாட்டம் (வேலைவாய்ப்பின்மை) என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
நிமிடத்திற்கு 3,000 பேருக்கு கொரோனா.. தினசரி 25 ஆயிரம் பேர் பலி! சீனாவை சூழும் இருண்ட காலம்
வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு
இந்நிலையில் தற்போது ஷாக் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான (சிஎம்ஐஇ) சார்பில் வேலைவாய்ப்பின்மை தொடர்பான விபரங்களை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான வேலைவாய்ப்பின்மை நிலவரம் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த நவம்பர் மாதத்தை விட அதிகரித்துள்ளதாக கூறபப்ட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:
எத்தனை சதவீதம் அதிகரிப்பு?
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் என்பது 8.30 என்ற அளவாக உள்ளது. இது கடந்த 16 மாதங்கள் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த நவம்பரில் வேலைவாய்ப்பின்மை என்பது 8 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது இது 0.30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
நகரங்கள் அதிகம் பாதிப்பு
மேலும் நகர்புறங்களின் அடிப்படையில் பார்த்தால் கடந்த நவம்பரில் 8.96 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை என்பது இருந்தது. ஆனால் தற்போது அது கிடுகிடுவென உயர்ந்து டிசம்பரில் 10.09 சதவீதமாக நீடித்தது. அதேநேரத்தில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை என்பது குறைந்துள்ளது. கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் கடந்த நவம்பரில் 7.55 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை டிசம்பரில் 7.44 சதவீதமாக சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியானாவில் அதிகரிப்பு
மாநிலங்கள் வாரியாக பார்த்தால் வடாமநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அதன்படி டிசம்பரில் அரியானாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது 37.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.5 சதவீதமாகவும், டெல்லியில் 20.8 சதவீதமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாசிட்டிவ் இருக்கா?
இதுபற்றி சிஎம்ஐஇயின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறுகையில், ‛‛வேலையில்லா திண்டாட்டம் என்பது கடந்த 2022ம் ஆண்டில் அதிகபட்சமாக டிசம்பரில் பதிவாகி உள்ளது. அதேநேரத்தில் வேலைவாய்ப்பு விகிதம் என்பது டிசம்பரில் 37.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பாசிட்டிவ்வான ஒன்றாகும். ஏனென்றால் 2022ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு டிசம்பரில் தான் வேலைவாய்ப்ப விகிதம் அதிகரித்துள்ளது'' என்றார்.
மத்திய அரசு முன்புள்ள சவால்
இந்தியாவில் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு மத்திய அரசின் முன்பு 2 பெரும் சவால்கள் உள்ளன. ஒன்று பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது. மற்றொன்று இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பது. ஏனென்றால் இந்த 2 பிரச்சனைகளையை மையப்படுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்ய துவங்கி உள்ளன. இதனால் இந்த 2 பிரச்சனைகளுக்கு மத்திய பாஜக அரசு தீர்வு காண்பது மிகவும் முக்கியமானதாகும்.