இதுதான் பாசம்.. வங்கதேசத்தினரை காப்பாற்ற விரைந்த டாக்டர்கள் குழு! இனியாவது திருந்துவாரா யூனுஸ்?
டெல்லி: வங்கதேசம் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து நம்மை வங்கதேசம் சீண்டி வருகிறது. இதற்கிடையே தான் சீனா தயாரிப்பான வங்கதேச ராணுவத்துக்கு சொந்தமான பயிற்சி போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி - கல்லூரி மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் 25 குழந்தைகள் உள்பட 31 பேர் பலியாகி உள்ளனர். பள்ளி குழந்தைகள் உள்பட 150 பேர் வரை தீக்காயத்துடன் உயிருக்கு போராடி வரும் நிலையில் மோதலை மறந்து அந்த நாட்டு மக்களின் உயிர்களை காக்க தீப்புண்ஆற்றும் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களை நம் நாடு அனுப்பி வைத்துள்ளது. மேலும் உயர் சிகிச்சை தேவையென்றால் இந்தியா அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கும் நம் நாட்டுக்கும் இடையே மோதல் உள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் பொறுப்பேற்றது முதல் நம்மை சீண்டி வருகிறார்.

பாகிஸ்தான், துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து எல்லையில் பதற்றத்தை உருவாக்கி வருகிறார் முகமது யூனுஸ். இதனால் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே இருந்த நட்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமாகி உள்ளது.
இதற்கிடையே தான் நேற்று முன்தினம் வங்கதேசத்தில் ஒரு துயர சம்பவம் நடந்தது. வங்கதேச தலைநகர் டாக்காவின் உத்தர பகுதியில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அப்போது அதன் மேல் பறந்து சென்ற வங்கதேசத்தின் போர் விமானம் பள்ளி, கல்லூரி மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதாவது சீனாவின் எஃப் 7 என்ற பயிற்சி போர் விமானத்தை வங்கதேசம் வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த எஃப் 7 பயிற்சி போர் விமானம் தான் விபத்தில் சிக்கியது.
இதில் விமானத்தில் பயணித்தவர்கள், பள்ளியில் இருந்தவர்கள் என பலரும் தீக்காயமடைந்தனர். இந்த விபத்தில் தற்போது வரை 31 பேர் பலியாகி உள்ளனர். இதில் 25 பேர் குழந்தைகள். இன்னும் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர். பலரும் தீக்காயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பாக வங்கதேச விமானப்படை சார்பில் உயர்மட்ட குழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து இருந்தார். மேலும் வங்கதேசத்துக்கு இந்தியாவால் முடிந்த உதவிகளை வழங்குவதாகவும் அறிவித்தார். அதன்படி விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நம் நாட்டில் இருந்து தீப்புண் காயங்கள் தொடர்பான பிரிவில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் வங்கதேசம் விரைந்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பை மத்திய வெளியுறவுறத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‛‛ வங்கதேச விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீப்புண் சிகிச்சை பிரிவில் நிபுணத்துவம் பெற்ற சிறப்பு டாக்டர்கள், செவிலியர்கள் டாக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்தக் குழு நோயாளிகளின் உடல்நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் மேல் சிகிச்சை பெறுவதற்கான பரிந்துரைகளை வழங்கும். இந்த குழுவை தொடர்ந்து தேவைப்பட்டால் கூடுதல் மருத்துவக் குழுக்களும் டாக்காவிற்கு அனுப்பப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விமான விபத்தில் காயமடைந்த வங்கதேசத்தினருக்கு நம் நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய மருத்துவ குழுவில் டெல்லியைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உள்ளனர். அதில் ஒருவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையைச் சேர்ந்தவர். இன்னொருவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications