இந்தியா கையில் துருப்புச்சீட்டு..ராணுவத்தின் கஸ்டடியில் இரு விமானிகள்? மறுக்கும் பாக்..அடுத்து என்ன?
டெல்லி: போர் நிறுத்தத்தை மீறிய நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் வசம் இரண்டு பாகிஸ்தான் விமானிகள் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் நிலையில் அவர்களை ஒப்படைக்க மே 12ஆம் தேதி நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படலாம் என கூறப்பட்டுகிறது. ஆனால் விமானிகளை ஒப்படைக்கும் ஜெனீவா ஒப்பந்தம் இந்த விவகாரத்துக்கு பொருந்தாது என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த மூன்று தினங்களாக இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது.
ஒருபுறம் பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் இந்திய எல்லைக்குள் வராமல் பார்த்துக் கொண்டதோடு, மறுபுறம் இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளிடையே நேரடி போர் ஏற்படும் சூழல் உருவான நிலையில் பல்வேறு உலக நாடுகள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

தொடர்ந்து இருநாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். சிறிது நேரம் இடைவேளையில் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இந்தியா 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது, என்றும் இரு நாடுகளும் அதனை ஏற்று கொண்டதாக கூறியிருந்தார்.
ஆனால் மூன்று மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஸ்ரீநகர், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் அத்துமீறியதாகவும் அதனை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியானது. தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் பாகிஸ்தான் அத்துமீறியது உண்மைதான் என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் மே 12ஆம் தேதி இரு தரப்பிடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் வசம் தற்போது இரு பாகிஸ்தான் விமானிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறிய போது பாகிஸ்தானின் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்திதாகவும் இரு விமானிகள் தற்போது இந்தியாவின் வசம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்திகளை பாகிஸ்தானோ அல்லது இந்தியாவோ உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இந்திய எல்லையைத் தாண்டிய போர் விமானத்தில் இருந்து விமானி குதித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக ட்ரிப்யூன் தளம் மேற்கோள் காட்டியது. இது உண்மையாக இருந்தால், பாகிஸ்தான் விமானிகள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததை இந்தியா உலக நாடுகளுக்கு நிரூபிக்க உதவும். தனது போர் விமானங்கள் எல்லையைத் தாண்டவில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக போரில் ஈடுபடாததால், போர்க் கைதிகள் பரிமாற்றத்துக்கு வகுக்கும் ஜெனீவா மாநாட்டின் கீழ் இவ்விசகாரம் வராது.
கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு F-16 போர் விமானம் மற்றும் இரண்டு JF-17 போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியா பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து இன்னும் எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வரவில்லை.
ஜம்மு-காஷ்மீரின் நௌஷேரா செக்டாரில் இந்திய ராணுவ வான் பாதுகாப்புப் பிரிவுகளால் இரண்டு பாகிஸ்தானிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ள நிலையில்,
பாகிஸ்தான் அரசின் பிடிவி நியூஸ், பாகிஸ்தான் எந்த விமானத்தையும் இழக்கவில்லை , எந்த விமானியையும் இழக்கவில்லை, எந்த எஃப்-16 போர் விமானத்தையும் இழக்கவில்லை என கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications