அடுத்த கட்டத்திற்கு அப்கிரேடு ஆகும்.. இந்திய விமானப்படை! உற்று நோக்கும் பாகிஸ்தான்
டெல்லி: எதிர்கால இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக விளங்க இருக்கும் விமானம்தான் தேஜஸ். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களுக்கான என்ஜினை அமெரிக்காவிடமிருந்து பெற இந்தியா ஆர்டர் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் இந்திய விமானப்படையின் பலம் அதிகரிக்கும்.
இந்திய விமானப்படையில் பல்வேறு விமானங்கள் இருப்பினும், தேஜஸ் விமானத்திற்கு என தனி கெத்து இருக்கிறது. இது லைட் ஏர்கிராப்ட் வகையை சேர்ந்தது. அதாவது, இந்த விமானத்தின் செயல்பாடுகள் எளிமையாக இருக்கும். எனவே இயக்குவதற்கும், களத்தில் எதிரிகளுடன் சண்டையிடுவதற்கும் மிகவும் பொருத்தமான விமானமாக இருக்கிறது.

தேஜஸ் விமானத்தின் பலம்
இந்த வகை விமானங்கள் ஒலியை விட 1.6 மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடியவை. அதிகபட்சமாக 3,500 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை இது சுமந்து செல்லும். 70-100 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்க பயன்படுத்தப்படும் அஸ்திரா ஏவுகணை, 30 கி.மீ தொலைவில் உள்ள குறுகிய தூர இலக்குகளை மிக துல்லியமாக தாக்கும் ஆர்-73 ஏவுகணை, 50-60 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்க பயன்படுத்தப்படும் டெர்பி வகை ஏவுகணை, 200 கி.மீ தொலைவில் இருக்கும் ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அம்சங்களை தாக்கி அழிக்க பயன்படும் ருத்ரம் ஏவுகணை என 10 வகையான ஏவுகணைகளை இதில் கொண்டு செல்ல முடியும்.
அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றம்
இந்தியாவிடம் தற்போது குறைவான அளவே இந்த விமானங்கள் இருக்கின்றன. இந்த விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், 113 விமானங்களுக்கு தேவையான என்ஜின்களை அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடமிருந்து பெற இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. 2027ம் ஆண்டு தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் இந்த என்ஜின்கள் இந்தியாவுக்கு கிடைக்கும்.
ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு இந்த என்ஜின்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கோவிட் காலம் என்பதால் வெறும் 4 என்ஜின்கள் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்தன. தற்போது செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில், பெண்டிங் உள்ள என்ஜின்களும் விநியோகிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனா
இந்திய விமானப்படையின் இந்த நவீனமயமாக்கல், சீனா மற்றும் பாகிஸ்தானின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தேஜஸ் விமானங்களால் எந்த ஆயுதங்களும் இல்லாமல் 1700 கி.மீ தூரம் வரை பறக்க முடியும். இதுவே ஆயுதங்களை ஏற்றி பறந்து, இலக்கை தாக்கிவிட்டு மீண்டும் திரும்புகிறது எனில் 500-600 கி.மீ தூரம் வரை பறக்கும். பாகிஸ்தானில் மூன்று முக்கிய இலக்குகளை தாக்கும் தூரத்திற்கு இந்த விமானங்களால் பறக்க முடியும்.
பறக்கும் திறன்
இஸ்லாமாபாத்/ராவல்பிண்டி - 450-550 கி.மீ
லாகூர் - 25-40 கி.மீ
கராச்சி - 900-1000 (வானில் எரிபொருள் நிரப்பினால் தாக்கலாம்)
ஆனால் சீனாவின் விமானப்படை இலக்குகளை தாக்க தேஜஸ் போதுமானதல்ல. சீனாவின் முக்கிய தலங்கள் இமயமலைக்கு பின்னால் 800 கி.மீ தூரத்திற்கு அப்பால் இருக்கின்றன. இருப்பினும் இந்த விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பினால், சீன இலக்குகளை தாக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, தேஜஸ் விமானங்களுக்கு என்ஜின் வாங்கும் விஷயத்தை சீனாவும் உற்று நோக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications