இந்தியாவிடம் மீண்டும் கச்சத்தீவு? இலங்கை ரகசிய ஒப்பந்தம்? தமிழ் எம்பி விக்னேஸ்வரன் பரபரப்பு தகவல்!
டெல்லி: கச்சத்தீவில் இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து இலங்கை அரசு ஒப்பந்தம் செய்திருக்கக் கூடும் என தகவல்கள் தமக்குக் கிடைத்திருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற எம்பியுமான சிவி விக்னேஸ்வரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிடம் 'நிர்வாக' ரீதியாக ஒப்படைக்கப்பட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்கிற தகவலை சிவி விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமான நிலப்பரப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியாக மீன்பிடிக்கும் பகுதி இது. ஆனால் 1974-ம் ஆண்டு மத்திய அரசு தமிழ்நாட்டை கலந்து ஆலோசிக்காமலேயே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. இதற்கு தமிழ்நாட்டில் அப்போதே ஆட்சியில் இருந்த திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து கச்சத்தீவு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கலாம் என்கிற உரிமைகள் இணைக்கப்பட்டு 1976-ம் ஆண்டு இன்னொரு ஒப்பந்தம் உருவானது. ஆனால் இதனை இலங்கை அரசு இன்று வரை பொருட்படுத்தவே இல்லை.
தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 850-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது. இன்று வரை தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்து சிறைகளில் அடைத்து வைத்துக் கொண்டிருக்கிறது. 100க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது இலங்கை.
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீண்டும் பெறுவதுதான் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியிலேயே கச்சத்தீவு தொடர்பான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற 10 நாட்களிலேயே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் இலங்கை வவுனியாவில் நேற்று சிவி விக்னேஸ்வரன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கச்சத்தீவில் இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசு அனுமதித்திருக்கிறது. இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதா என்பது தெரியாது என பூடகமாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications