இந்தியா குறித்து அமெரிக்கா பரபர அறிக்கை.. "இது புறந்தள்ள வேண்டியது.." ஒரே வரியில் மத்திய அரசு பதிலடி
டெல்லி: கடந்த ஆண்டு மணிப்பூரில் நடந்த வன்முறைகளின் போது அங்குக் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதை இந்தியா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் குறித்தும் அங்கு நடக்கும் பல நிகழ்வுகள் குறித்தும் அறிக்கையை வெளியிடும். அதன்படி இந்தியாவில் நடந்த சில சம்பவங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மணிப்பூர் கலவரம், ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஆகியவை குறித்த கருத்துகள் இருந்தது. இதற்கிடையே அமெரிக்காவின் இந்த அறிக்கையை இந்தியா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
பக்கச்சார்பானது: இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்த அறிக்கை பக்கச்சார்பானது.. இந்தியாவைப் பற்றிய மிக மோசமான புரிதலைக் கொண்டுள்ளார்கள் என்பதையே இது பிரதிபலிக்கிறது. இந்த அறிக்கையை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த அறிக்கையைப் புறந்தள்ளிவிடலாம்" என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அறிக்கை: அமெரிக்க வெளியுறவுத் துறை 'மனித உரிமைகள் நடைமுறை 2023: இந்தியா' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே நடந்த இன மோதல்களில் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூட இந்த சம்பவத்தை "வெட்கக்கேடானது" என்று குறிப்பிட்டதாகவும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
பிபிசி ரெய்டு: அமெரிக்க வெளியுறவுத் துறை பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற அறிக்கையை வெளியிடும். அதில் இந்தாண்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் தான் இந்த பாயிண்டுகள் இடம்பெற்றுள்ளது. மேலும், பிரதமர் மோடி குறித்த டாக்குமென்டரியை பிபிசி ஊடகம் வெளியிட்ட பிறகு பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் 60 மணிநேரம் நடந்த சோதனை குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்த சோதனை குறித்த அந்த அறிக்கையில், "வரி மற்றும் ஒனர்ஷிப் குறித்த விவகாரத்தில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இருப்பினும், நிதி சார்ந்த செயல்முறைகளில் ஈடுபடாத பத்திரிகையாளர்களிடமும் கூட அதிகாரிகள் சோதனை செய்து அவர்களின் உபகரணங்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி விவகாரம்: மேலும், அதில் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.. அதைத் தொடர்ந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஆகிய நிகழ்வுகளும் இந்த ஆவணத்தில் இருக்கிறது. இந்த தண்டையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகே ராகுல் காந்தி லோக்சபாவுக்கு வந்தது குறித்தும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இதில் இந்தியாவில் நடந்த சில பாசிட்டிவ் பாயிண்டுகளையும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், காஷ்மீரில் ஸ்ரீநகரில் அணிவகுப்பு நடத்த அனுமதித்தது குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் 1989இல் ஊர்வலம், கூட்டங்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்வலத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளதை பாசிட்டிவான ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications