பிரம்மபுத்திராவில் ரூ.6.4 லட்சம் கோடி பிரம்மாண்டம்! சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா! இனிதான் ஆட்டமே
டெல்லி: பிரம்மபுத்திராவில் சீனா ஒரு பிரம்மாண்ட அணையைக் கட்டி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு வரும் நீர் வரத்துக் கணிசமாகக் குறையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே அதே பிரம்மபுத்திராவில் 6.4 லட்சம் கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்டத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஓடும் மிக முக்கியமான ஆறு பிரம்மபுத்திரா! வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் வழியாக பாயும் பிரம்மபுத்திரா பல கோடி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதற்கிடையே இந்தப் பிரம்மபுத்திரா ஆறுக்கு நடுவே ஒரு பிரம்மாண்ட அணையைச் சீனா கட்டுகிறது. இதனால் இந்தியாவுக்கு வரும் நீர் தடுக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

பிரம்மாண்ட பிளான்
இதற்கிடையே இந்த விவகாரத்தில் இந்தியா இப்போது 6.4 லட்சம் கோடி ரூபாய் ($77 பில்லியன்) பிரம்மாண்டத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவின் மின்சாரத் திட்டமிடல் ஆணையமான மத்திய மின்சார ஆணையம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி 2047ஆம் ஆண்டுக்குள் பிரம்மபுத்திரா படுகையில் இருந்து 76 ஜிகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யப் புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும். பிரம்மபுத்திரா படுகையிலிருந்து இந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதற்காக $77 பில்லியன், அதாவது 6.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பிரம்மாண்டத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா
இந்தத் திட்டத்தின் கீழ், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரம்மபுத்திராவின் 12 துணைப் படுகைகளில், 208 பெரிய நீர்மின் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இருந்து 64.9 GW மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மேலும், பம்ப்ட் சேமிப்பு ஆலைகளில் இருந்து கூடுதலாக 11.1 GW உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் ஒட்டுமொத்த மின்திறன் 76 ஜிகாவாட்டாக உயரும்
சீனாவின் திபெத்தில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா மற்றும் வங்கதேசம் வழியாகப் பாய்ந்து வங்கக் கடலில் சேர்கிறது. பிரம்மபுத்திரா பாயும் இந்தியப் பகுதியில் இருந்து குறிப்பிடத்தக்கப் புனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குறிப்பாகச் சீன எல்லையில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தில் அதிகபட்ச மின்சார உற்பத்தித் திறன் இருக்கிறதாம்.
ஏன் முக்கியம்
இந்த ஆற்றுப்படுகை இரு நாட்டு எல்லையில் சீனாவுக்கு அருகே அமைவதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சீனாவில் பிரம்மபுத்திரா ஆறு, யார்லுங் சாங்போ நதி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், பிரம்மபுத்திராவின் மேல் பகுதியான யார்லுங் சாங்போ நதியில் சீனா அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த அணையைச் சீனா திட்டமிட்டபடி கட்டினால் வறண்ட காலங்களில் இந்தியப் பகுதிக்கான நீர்வரத்து 85% வரை குறையலாம் என்ற அஞ்சப்படும் நிலையில், இந்தியா இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.
பிரம்மபுத்திரா படுகை என்பது அருணாச்சல பிரதேசம், அசாம், சிக்கிம், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்தியாவின் பயன்படுத்தப்படாத புனல் மின்சாரத் திறனில் 80%க்கும் மேல் இந்தப் படுகையில் உள்ளதாக மத்திய அரசு அறிக்கை கூறுகிறது.
படிப்படியாக அமல்
இந்தத் திட்டத்தின் முதல் கட்டம், 2035 வரை படிப்படியாகச் செயல்படுத்தப்படும். இதற்கு 1.91 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இரண்டாவது கட்டத்திற்கு 4.52 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை மேற்கொள்ளும். இவற்றில் சில திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications