முடிவுக்கு வரும் மோதல்? இந்தியா அமெரிக்கா இடையே மிக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து! ஏன் முக்கியம்?
டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே வரி விவகாரம் தொடர்பாக மோதல் நிலவி வந்தது. ஆனால், இப்போது நிலைமை மெல்லச் சீராகி வருவது போலவே தெரிகிறது. இதற்கிடையே பாதுகாப்புத் துறையில் இந்தியா அமெரிக்கா இடையே மிக முக்கியமான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு பார்ட்னர்ஷிப்பை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும்.
இந்தியா அமெரிக்கா இடையே இந்தாண்டு தொடக்கம் முதலே பதற்றமான சூழல் உருவானது. டிரம்ப் அறிவித்த வரிகளே இதற்குப் பிரதானக் காரணமாகும். இடையில் வரிகள் சில காலம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் இந்தியப் பொருட்கள் மீது டிரம்ப் வரிகளை அறிவித்தார்.

இந்தியா அமெரிக்கா
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாலேயே உக்ரைன் போர் தொடர்வதாகச் சொன்ன டிரம்ப், இதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார். இருப்பினும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. இதனால் இந்தியா மீது 50% வரிகளை டிரம்ப் அறிவித்தார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், இது மெல்லச் சீராகி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உறுதி செய்யும் விதமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.. மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் இடையே மலேசியாவில் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ராஜ்நாத் சிங்
இரு நாடுகளுக்கும் இடையிலான இணக்கமான சூழல் அதிகரிக்கும் நிலையில், அதற்கான சிக்னலாகவே இது இருப்பதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இது தொடர்பாக ராஜ்நாத் சிங் தனது ட்விட்டரில், "கோலாலம்பூரில் அமைச்சர் பாதுகாப்பு துறை அமைச்சருடன் பயனுள்ள ஆலோசனைக் கூட்டம் நடந்தது.. அப்போது 10 ஆண்டு அமெரிக்க- இந்தியா பாதுகாப்பு பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இது ஏற்கனவே வலுவான நமது பார்ட்னர்ஷிப்பில் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்புத் துறை என்பது நமது இருதரப்பு உறவுகளின் முக்கிய தூணாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா சொல்வது என்ன
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் இருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தனது ட்விட்டரில், "ராஜ்நாத் சிங்கை சந்தித்து அமெரிக்க- இந்தியா பாதுகாப்பு கட்டமைப்பிற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இது எங்கள் பாதுகாப்பு பார்டனர்ஷிப்பை முன்னெடுத்துச் செல்லும். இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மைல்கல்" என்று பதிவிட்டுள்ளார்.
இறுதி முடிவு
முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஹெக்ஸெத் தொலைப்பேசி மூலம் இந்த பாதுகாப்பு பார்ட்னர்ஷிப் குறித்து உரையாடினர். மேலும், பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலுவையில் இருக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தனர். அப்போது தான் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பான முடிவு இறுதி செய்யப்பட்டது.
இந்தியா அமெரிக்கா இடையே இந்தாண்டு தொடக்கத்தில் வரி விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும்.. சமீபத்திய மாதங்களில் நிலைமை மெல்லச் சீராகியே வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த டீல் கையெழுத்தாகியுள்ளது.












Click it and Unblock the Notifications