"நாட்டின் நலனுக்கே முக்கியத்துவம்.." டிரம்ப்பின் வரி அறிவிப்பு வந்தவுடன்.. மத்திய அரசு தந்த விளக்கம்
டெல்லி: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.. அமெரிக்காவின் அறிவிப்பால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து வருவதாகவும் இந்தியாவின் நலனைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரியை விதிப்பதாக இன்று மாலை அறிவித்தார். இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், திடீரென டிரம்ப் இதுபோல அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தைத் தருவதாகவே இருந்தது. ஏற்கனவே இந்த வரி விவகாரத்தில் மத்திய அரசைக் காங்கிரஸ் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டது.

மத்திய அரசு விளக்கம்
இதற்கிடையே டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவுடன் நியாயமான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக நடைபெற்று வருவதையும் வர்த்தக துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இதன் தாக்கங்களை அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நியாயமான, சமநிலையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அந்த இலக்கை அடைவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டின் நலனே முக்கியம்
மேலும், விவசாயிகளின் நலன், தொழில் முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்துடன் செய்து கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தையும் மேற்கொள் காட்டிய மத்திய அரசு, "தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். இங்கிலாந்துடன் செய்து கொள்ளப்பட்ட சமீபத்திய பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் உட்பட மற்ற வர்த்தக ஒப்பந்தங்களிலும் இது பிரதிபலிக்கும்" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் அறிவிப்பு
முன்னதாக, டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வரி குறித்து அறிவித்திருந்தார். இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிற்கு 25% வரி விதிப்பதுடன் கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ராணுவ ஆயுதங்கள் வாங்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
காரணம் என்ன
அவர் மேலும் கூறுகையில், "இந்தியா எங்கள் நண்பர், அதே நேரத்தில் அவர்களுடன் நாங்கள் குறைவான வர்த்தகமே செய்கிறோம். ஏனெனில் அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் ரஷ்யாவிடமிருந்து அதிக ராணுவ ஆயுதங்களை வாங்குகிறார்கள். சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறார்கள். உக்ரைன் போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.. ஆனால் இந்தியா அதற்குத் துணை போகிறது" என்று டிரம்ப் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications