கையில் பந்துடன் ராகுல் டிராவிட்.. வலையில் களை கட்டிய பயிற்சி.. நியூசிலாந்தை வீழ்த்த தீவிரம்
டெல்லி: புதன்கிழமை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை எதிர்கொள்ள, ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக கொண்ட இந்திய அணி தயாராக உள்ளது.
இரு அணிகளும் முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், பின்னர் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் மோத உள்ளன.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஐ தொடங்குவதற்கு முன்னதாக, திங்களன்று புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி தனது முதல் வலைப் பயிற்சியை மேற்கொண்டது.

தீவிர பயிற்சி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்கிழமையான இன்று, தனது சமூக ஊடக பக்கங்களில், இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டது. அங்கு புதிய டி20 கேப்டன் ரோகித் சர்மா உட்பட இந்திய வீரர்கள் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலின் கீழ் தீவிர பயிற்சி எடுத்ததை பார்க்க முடிகிறது.

பந்து போட்ட ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட், த்ரோ டவுன் முறையில் பந்துகளை வீரர்களுக்கு வீசி அவர்கள் பேட் செய்யும் முறையை கண்காணித்தார். தனது நீண்ட நெடிய அனுபவத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.

உலக கோப்பைதான் இலக்கு
முன்னதாக கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில், அணியை நீண்ட காலத்திற்கு வளர்த்தெடுப்பதுதான் எங்கள் நோக்கம். அடுத்த உலக கோப்பையை நோக்கி அணியை முன்னேற்ற வேம்டும். எந்த வீரர்கள் சிறப்பாக ஆடுகிறார்கள் என்பதை பார்க்க இடைப் பட்ட போட்டிகள் பலன் அளிக்கும். இவ்வாறு கே.எல்.ராகுல் தெரிவித்தார். இவர்தான் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கோச்
இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி துறந்துவிட்டார். தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்தான், புதிய கேப்டனாக ரோகித் சர்மாவும், தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஆகியோரும், நியமிக்கப்பட்டுள்ளனர். புது ரத்தம் பாய்ச்சப்பட்ட இந்த அணி நியூசிலாந்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது பற்றி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications