வெனிசுலா பதற்றம்.. அதிகாரத்தை கையிலெடுத்த அமெரிக்கா.. இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
டெல்லி: போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக கூறி, வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வெனிசுலா நாட்டை, நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருப்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது. அவர் சிறைபிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வெனிசுலா அதிபர் கைது
வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார். "அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த தாக்குதலில் வெனிசுலா மக்கள், ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்த நாட்டின் அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
அமெரிக்காவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அமெரிக்காவில் இருந்தே டிரம்புக்கு கண்டனம் வருகிறது. நியூயார்க் மேயர் மம்தானி டிரம்பின் செயலை கடுமையாக கண்டித்துள்ளார். எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலாவின் அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவழியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 50க்கும் மேற்பட்டோரும் வசித்து வருகிறார்கள். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியில் வருவதை முற்றிலும் தவிர்க்கவும்.
தொடர்பு எண்
வெனிசுலாவுக்கு அத்தியாவசியமில்லாத எந்த பயணத்தையும் இந்தியர்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அங்குள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். +58-412-9584288 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அந்த எண்ணில் வாட்ஸ் அப் அழைப்பும் மேற்கொள்ளலாம். தூதரகம் மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications