என்னப்பா சொல்றீங்க.. இந்தியர்களின் ஆயுட்காலம் 2.5 வருஷம் குறையப்போகுதாம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்
டெல்லி: காற்று மாசு காரணமாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலம் இரண்டரை ஆண்டுகள் குறையும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் உலக அளவில் காற்று மாசு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2017 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உட்புற மற்றும் வெளிப்புற காற்று மாசு காரணமாக வெப்பத் தாக்கம், நீரிழிவு, மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் சுமார் 50 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

3-வது இடத்தில் இந்தியா
ஏற்கனவே, கால மாற்றம், உணவு முறை போன்ற காரணங்களால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 65 வயதாக மாறிவிட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியா மற்றும் சீனாவில் தலா 12 லட்சம் பேர் காற்று மாசு காரணமாக உயிரிழந்து உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக மரணத்திற்கான காரணங்களில் 3-வது இடத்தில் காற்று மாசு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மழை குறைவுக்கு காரணம்
நிலப்பகுதி அதிகப்படியான வெப்பம் அடையும் நிகழ்வு என்பது காற்றழுத்தத்துடன் தொடர்புடையதாகும். காற்றழுத்தம் மாறும் காரணங்களால் மேகங்கள் உருவாவது குறைந்து போகிறது. இதனால் மழையும் பல இடங்களில் குறைந்துவிடுகிறது.

மோசமான பாதிப்பு
பருவ நிலை மாற்றத்தால் பூமியின் நிலப்பகுதி மிக அதிகப்படியான வெப்பம் அடைவதால் காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் விவசாயம் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் பொய்த்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள 95 சதவீத நகரங்கள் மோசமான பருவநிலை சார்ந்த அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

84 நகரங்கள்
பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை, தீவிர வானிலை ஆகியவற்றால் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் 100 நகரங்களில், 84 நகரங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இருக்கும் காற்று மாசுக்களின் அளவை குறைக்கவில்லை என்றால் வரும் 2050-ம் ஆண்டில் கோடைக் காலத்திலேயே ஆர்டிக் கடல் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிவிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications