ஏசி பெட்டிகளின் வருவாய் உயர்வு! சாதாரண பெட்டிகள் வருவாய் சரிவு! ரயில்வேயில் சத்தமின்றி நடந்த மாற்றம்
டெல்லி: இந்தியாவில் மக்கள் எப்போதும் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில்களையே விரும்புவார்கள். ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இதில் ஒரு சுவாரசியமான டிரெண்ட் தெரிய வந்துள்ளது. அதாவது கொரோனாவுக்கு முன்பு வரை ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் மூலமாகவே அதிக வருவாய் கிடைத்த நிலையில், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
நமது நாட்டில் ரயில் போக்குவரத்துக்கு எப்போதும் மிக முக்கியமான இடம் இருக்கிறது. நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் குறைந்த செலவில் நம்மால் ரயில்களில் செல்ல முடிகிறது.

இதற்கிடையே கொரோனாவுக்கு பிறகு 5 ஆண்டுகளில் ரயில் வருமானத்தில் மிக மேஜர் மாற்றம் நடந்துள்ளது. நமது நாட்டில் ரயில் பயணங்களும் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் எப்படி மாறி வருகிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.
ஏசி பெட்டிகள் வருவாய் அதிகரிப்பு
கொரோனாவுக்கு முன்பு, அதாவது 2019-20ஆம் ஆண்டில் ஏசி வகுப்புகள் (ஏசி முதல் வகுப்பு, ஏசி 2ம் அடுக்கு, ஏசி 3ம் அடுக்கு மற்றும் ஏசி சேர் கார்) மூலம் கிடைக்கும் வருமானம் என்பது மொத்த ரயில்வே பயணிகள் வருவாயான ரூ.50,669 கோடியில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 36 சதவீதம் மட்டுமே இருந்துள்ளது. அதேநேரம் அந்த சமயம் ஏசி அல்லாத பெட்டிகளில் கிடைக்கும் வருவாய் என்பது மொத்த வருவாயில் 58 சதவீதமாக இருந்துள்ளது.
ஆனால், கொரோனா பரவலுக்குப் பிறகு இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. 2024-25ஆம் ஆண்டின் வருவாய் குறித்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில் ரயில்களில் பயணிகள் வருவாய் ரூ.80,000 கோடியாக இருக்கிறது. அதில் ஏசி பெட்டிகளில் இருந்து 54 சதவீத வருவாய் வந்துள்ள நிலையில், ஏசி அல்லாத பெட்டிகளில் இருந்து வெறும் 41 சதவீதம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஏசி இல்லாத பெட்டிகள்
ஏசி அல்லாத பெட்டிகள் என்பது இரண்டாம் வகுப்பு மெயில்/ எக்ஸ்பிரஸ் பெட்டிகளையும் உள்ளடக்கும். மேலும், ஓவர்நைட் இயக்கப்படும் ரயில்களில் ஏசி இல்லாத சாதாரண படுக்கை வகுப்பு பெட்டிகளில் கிடைக்கும் வருமானமும் இதில் சேர்க்கப்படுகிறது. அதேநேரம் இதில் புறநகர் ரயில்களில் இருந்து கிடைக்கும் வருவாய் சேர்க்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாறும் டிரெண்ட்
கொரோனாவுக்கு முன்பு 2019-20 காலகட்டத்தில் ஏசி பெட்டிகளில் 18 கோடி பேர் பயணித்துள்ளனர். அதேநேரம் இப்போது அந்த எண்ணிக்கை 38 கோடியாக இருமடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும், 2019-20 ஆம் ஆண்டில் மொத்த 809 கோடி பயணிகளில் 2.2 சதவிகிதம் பேர் மட்டுமே ஏசி பெட்டியில் பயணித்தவர்கள். 2024-25ல், மொத்தமுள்ள 727 கோடி பயணிகளில் 5.2 சதவீதம் பேர் ஏசியில் பயணித்தவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைப்பட்ட காலத்தில் ரயில் டிக்கெட்களின் விலையும்6 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2019-20 காலகட்டத்தில் ஸ்லீப்பர் கிளாஸில் சராசரி கட்டணமாக ரூ.368.28 இருந்தது. ஆனால், இப்போது அது ரூ.407.48ஆக அதிகரித்துள்ளது. இரண்டாம் கிளாஸ் டிக்கெட் ரேட்டும் கூட இந்த காலகட்டத்தில் 5.52% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பழையபடி திரும்பவில்லை
இங்கு நாம் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் கூட அது இன்னும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடையவில்லை. 2019-2020 காலகட்டத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கை 809 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது அது 10% சரிந்து 727 கோடியாக மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications