இனி ஒரு ரயில் கூட அழுக்காக இருக்காது.! புதிய மேட்டரை கையில் எடுக்கும் இந்தியன் ரயில்வே! சூப்பர்
டெல்லி: இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரயில்கள் பராமரிப்பு எளிதாக அமையும் என்று கூறப்படுகிறது.
உலகிலேயே மிகவும் பழமையான ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே இருக்கிறது. 1850களில் இந்தியன் ரயில்வே தனது சேவையைத் தொடங்கிய நிலையில், அதன் பின்னர் மெல்ல ரயில் சேவையை விரிவுபடுத்தியே வருகிறது.

இந்திய ரயில்கள் போதியளவில் வேகமாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இல்லை என்று விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் கொண்டு வரப்பட்டன.
இந்தியாவில் ரயில்கள் இப்படிக் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியன் ரயில்வே பல வசதிகளைக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. சில ஆண்டுகளில் ரயில்வே துறையில் பல நவீன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட ரயில்களுக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.
புதிய வகை ரயில்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ.. அதே அளவுக்கு ஏற்கனவே இருக்கும் ரயில்களுக்கும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். அப்போது தான் பயணிகளுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இப்போது இந்தியன் ரயில்வே சார்பில் சுமார் 20 ஆண்டுகள் பழமையான பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த ரயில்களை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.
குற்றச்சாட்டுகள்: இருப்பினும், ரயில்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இணையத்திலும் இது குறித்த பல புகார்களை நம்மால் பார்க்க முடியும். இதனிடையே இதற்கு நிரந்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியன் ரயில்வே சூப்பரான ஒரு திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ரயில்களைச் சுத்தமாக்கிப் பராமரிக்க ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளனர்.
இந்திய ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில்களுக்கான தானியங்கி சுத்தம் செய்யும் செய்யும் இயந்திரங்களை உற்பத்தி செய்ய கோத்ரேஜ் குழுமம் ஜப்பானைச் சேர்ந்த JCW என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. JCW நிறுவனத்தின் நிபுணத்துவம் இந்தியாவில் நீண்ட அனுபவம் கொண்ட கோத்ரேஜ் நிறுவனத்துடன் கை கோர்ப்பது உலகளவில் டாப் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவும்.
ஜப்பான் தொழில்நுட்பம்: இந்தியாவில் இப்போது ஊழியர்களே ரயில்களைச் சுத்தம் செய்து வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோல தானியங்கி முறையில் ரயில்களைச் சுத்தம் செய்யும் முறை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுக்க சுமார் 50 தானியங்கி சுத்தம் செய்யும் அமைப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவுக்கு விரைவில் வரும் இந்த புதிய பராமரிப்பு இயந்திரங்கள், நிலையான தீர்வை வழங்கும்.. இது வளங்கள் மற்றும் நேரம் திறம்படப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடக்கத்தில் சிறிய அளவில் இதைத் தொடங்கி பின்னர் நாடு முழுக்க தானியங்கி ரயில் சுத்தம் செய்யும் இயந்திரங்களை அமைக்க கோத்ரேஜ் முடிவு செய்துள்ளது. இது குறித்து வரும் காலத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications