சிறுபான்மையினருக்கு அநீதி! நீதி கோரி நாடாளுமன்ற வளாகத்தில் போராடிய முஸ்லீம் லீக் எம்.பி.க்கள்!
டெல்லி: சிறுபான்மை மக்கள் விரோத நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கூடிய அவர்கள், புல்டோசர் அரசியலுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

முஸ்லீம் லீக் எம்.பி.க்கள்
சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ.க. அரசு அநீதி இழைப்பதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இ.டி. முஹம்மது பஷீர், பி.வி.அப்துல் வஹாப், எம்.பி.அப்துஸ் ஸமது சமதானி, கே.நவாஸ்கனி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 'சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள், இந்தியாவை காப்பாற்றுங்கள்', புல்டோசர் மூலம் சிறுபான்மை யினர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்க வேண்டும் மற்றும் நீதி வேண்டும்! நீதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இ.டி.முஹம்மது பஷீர்
''கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட மத வழிப்பாட்டுத் தலங்களை அனைத்தும் அதே நிலையிலேயே தொடர வேண்டும். அதில் எவ்வித மாற்றத்தையும் செய்யக்கூடாது என மத வழிப்பாட்டுத் தலங்கள் சட்டம் 1991-இல் கூறப்பட்டுள்ளது.தற்போது வலதுசாரி சக்திகள் மட்டுமின்றி பா.ஜ.க. வும் இந்த சட்டத்தை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர்.''

மத வழிப்பாட்டுத் தலங்கள்
''எங்களது கோரிக்கை என்னவென்றால் இந்த மத வழிப்பாட்டுத் தலங்கள் சட்டத்தை உறுதியாக நிலைப்படுத்த வேண்டும் என்பதே. பா.ஜ.க.வினர் கல்வியை காவி மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாடப் புத்தகங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கையை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இதுவே எங்களது முக்கிய கோரிக்கைகள். இதற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.இவ்வாறு இ.டி. முஹம்மது பஷீர் தெரிவித்தார்.''

புல்டோசர் அரசியல்
பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் வீடுகளை புல்டோசரால் தரைமட்டம் ஆக்குவதை புதிய வழிமுறையாக அம்மாநில அரசு செய்து வருவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். சிறுபான்மை விரோத நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications