ஏழைகளுக்கு, மகாலட்சுமி அருள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்: பிரதமர் மோடி பேட்டி
டெல்லி: 2025-2026 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி," இந்த பட்ஜெட் கூட்டத்
தொடரில் பல வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என்றும், நடுத்தர வர்க்கத்தினருக்கான அன்னை லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும் என பேசினார்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

அந்த வகையில் பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாரட் வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் குழு கூட்டத்தில் பேசிய அவர்," கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு உதவித்தொகை 41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது, மக்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல் சிறப்பாக செயல்படுத்துகிறது என பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மத்திய
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்கிறார்.
நாளை மத்திய அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து முறை முழுமையான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டாவது முறையாக நாளை மத்திய பட்ஜெட்டை நிர்மலா
சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இன்று தொடங்கும் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாவது அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்," செல்வம் மற்றும் செழுமை வழங்கும் தெய்வமான மகாலட்சுமியை வணங்குகிறேன். எங்கள் நாட்டின் ஏழைகளை நடுத்தர மக்களை
மகாலட்சுமி தொடர்ந்து ஆசிர்வதிக்க வேண்டும் அவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும்.
மகாலட்சுமி வெற்றியையும் விவேகத்தையும் தருவார். மூன்றாவது முறையாக நாட்டுக்கு சேவை அளிக்க மக்கள் வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். மூன்றாவது முறையான ஆட்சியில் பாஜக அரசு தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் இதுவாகும். மூன்றாவது ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக போர்க்கால அடிப்படையில் இந்த அரசு பணியாற்றி வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பல வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
செயல்பாடு மாற்றம் தான் எங்கள் தாரக மந்திரம். 2046இல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்ற பட்ஜெட் கூட்டம் வழிகாட்டும் என நம்புகிறேன். இந்திய ஜனநாயக நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்தது, இந்த நேரத்தில் மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தியா உலக அரங்கில் தன்னை மிகச்சிறந்த நாடாக முன்னிறுத்திக் கொண்டிருக்கிறது. 2047 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது தனது விசித் பாரத் ( வல்லரசு
இந்தியா) இலக்கை நிறைவேற்றி இருக்கும்.
இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும். அதிக இளைஞர்களை கொண்ட நாடான தன்னிறைவு நாடாக முழுமை பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. 140 கோடி இந்தியர்கள் கூட்டு முயற்சியால் வல்லரசு நோக்கத்தை நிறைவேற்றுவார்கள். இந்த கூட்டத்தொடரில் மகளிர் முன்னேற்றத்திற்காக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்காக அனைத்து எம்பிகளும் பங்களிப்பார்கள். இந்த பட்ஜெட் கூட்டத்துடன் சுமூகமாக நடைபெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்" என தெரிவித்தார்












Click it and Unblock the Notifications