உலகை திரும்பி பார்க்க வைக்கும் இந்தியா! இந்த மாதமே இயக்கப்படும் "முதல் ஹைட்ரஜன் ரயில்.." எந்த ரூட்?
டெல்லி: நமது நாட்டில் இன்னுமே ரயில் சேவை தான் முக்கியமான பொது போக்குவரத்தாக இருக்கிறது. நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் ரயில் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே அடுத்த கட்ட பாய்ச்சலாக ஹைட்ரஜன் ரயில்களை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. ஹைட்ரஜன் ரயில் முதலில் எந்த மாநிலத்தில் இயக்கப்படும்.. எப்போது முதல் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வே துறை இப்போது தொடர்ச்சியாக புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வருகிறது. பயணிகளுக்கு மேம்பட்ட ஒரு அனுபவத்தைக் கொடுக்கவே ரயில்வே துறை இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே அடுத்தகட்டமாக ரயில்வே துறை ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது ரயில்வே துறைக்கு நிச்சயம் ஒரு வரலாற்று மைல்கல்லாக இருக்கும்.

எப்போது & எங்கே?
இந்த மாதம் மார்ச் 31ம் தேதி இந்த ரயில் தனது முதல் பயணத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஹரியானாவில் உள்ள ஜிந்த்- சோனிபட் பாதையில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது.. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது மற்றும் தூய்மையான எரிசக்தி நோக்கிச் செல்வதில் முக்கிய படியாக இந்த ஹைட்ரஜன் ரயில் இருக்கும்.
காலநிலை மாற்றம் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள சூழலில், ஹைட்ரஜன் ரயில் தான் ரயில்களின் எதிர்காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவை ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் இயங்குகிறது. அதைப் பயன்படுத்தும் போது அதில் இருந்து நீர் மற்றும் வெப்பம் மட்டுமே வெளியேறும்.
எதிர்காலமே இதுதான்
வழக்கமான டீசல் ரயில்களில் கார்பன் வெளியேற்றம் அதிகமாக இருக்கும். மேலும், ஒலி மாசும் கூட கணிசமாக இருக்கும். இந்த இரண்டையும் ஹைட்ரஜன் ரயில்கள் மூலம் நம்மால் கட்டுப்படுத்த முடியும். இப்படிப் பல நன்மைகள் இருப்பதாலேயே இந்தியாவின் சிறந்த ரயில்களில் ஒன்றாக ஹைட்ரஜன் ரயில்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் முதற்கட்டமாக ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. வலுவான ரயில் கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகவும் ரயில் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் மாநிலமாகவும் ஹரியானா இருப்பதாலேயே ஹைட்ரஜன் ரயிலை இயக்க அம்மாநிலத்தைத் தேர்வு செய்துள்ளனர்.
ஹைட்ரஜன் ரயில் திறன்
அதிகபட்ச வேகம்: ஹைட்ரஜன் ரயிலால் அதிகபட்சம் மணிக்கு 110 கிமீ வேகத்தை எட்ட முடியும். இது அதிவேக பயணத்தை உறுதி செய்கிறது.
பயணிகள் திறன்: இந்த ரயிலில் அதிகபட்சம் 2,638 பயணிகள் செல்லலாம்.
இயந்திர சக்தி: இந்த ரயிலில் 1,200 ஹெச்பி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் உலகின் அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன்-ரயிலாக இது இருக்கும்.
ஹைட்ரஜன் ரயில் நன்மைகள்
ஜீரோ கார்பன் வெளியேற்றம்: டீசல் என்ஜின்களில் கார்பன் வெளியேற்றம் அதிகமாக இருக்கும். அதேநேரம் ஹட்ரஜன் ரயில்களில் நீராவி மட்டுமே வெளியேறும். இதன் மூலம் மாசை குறைக்கலாம்.
செலவு குறையும்: ஹைட்ரஜன் ரயில்களை முதலில் இயக்க தொடங்கும் போது அதற்கு அதிக முதலீடு தேவைப்படும். இருப்பினும், தொடர்ந்து நீண்ட காலம் அதை இயக்கும் போது எரிபொருள் செலவும் கணிசமாகக் குறையும்.
ஒலி மாசு: ஹைட்ரஜன் ரயில்கள் மிகவும் அமைதியாக இயங்கும். இதன் மூலம் ஒலி மாசும் முழுமையாகக் கட்டுப்படுத்த இது பெரியளவில் உதவும்
ஜீரோ கார்பன் வெளியேற்றம்
2030 ஆம் ஆண்டுக்குள் நெட் ஜீரோ கார்பன் வெளியேற்றம் என்ற நிலையை அடைவதை இந்திய ரயில்வே நோக்கமாகக் கொண்டு இருக்கிறது. இந்த இலக்கை அடைய ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்கள் மிகப் பெரியளவில் உதவும். ஏற்கனவே ஜெர்மனி, சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவும் அந்த லிஸ்டில் இணைய உள்ளது.












Click it and Unblock the Notifications