போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்கள்! பெங்களூரை ஓவர்டேக் செய்த கொல்கத்தா! அப்போ சென்னை?
டெல்லி: பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாக நாம் சொல்லத் தேவையில்லை. ஆனால், இந்தாண்டு வெளியான உலகின் அதிக டிராபிக் கொண்ட நகரங்கள் பட்டியலில் பெங்களூர் மூன்றாவது இடத்தையே பிடித்து இருக்கிறது. மற்றொரு இந்திய நகரமான கொல்கத்தா உலகின் மிகவும் டிராபிக்கான நகரம் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது.
இப்போது வாகனங்களின் பயன்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் அனைத்து நகரங்களுமே டிராபிக் மிகுந்த ஒன்றாக மாறி வருகிறது.

வரும் காலத்தில் டிராபிக் எப்படி இருக்கும் என்பதை யூகித்து, அதற்கேற்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்றால் டிராபிக் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.
டிராபிக்:
நமது நாட்டை பொறுத்தவரை டிராபிக் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பெங்களூர் தான். அங்கே பீக் ஹவரில் வெளியே வந்துவிட்டால் பெரும்பாலான நேரம் நாம் டிராபிக்கில் தான் காத்திருக்க வேண்டி இருக்கும். வீக் எண்ட், விடுமுறை நாட்களில் எல்லாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இதனால் இந்தியாவில் நெரிசலான நகரம் என்றாலே பலருக்கும் பெங்களூர் தான் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது பெங்களூரை கூட மற்றொரு நகரம் ஓவர்டேக் செய்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த டாம்டாம் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் டாப் நகரங்களின் டிராபிக் நெரிசலை ஆராய்ந்து எது அதிக டிராபிக் நெரிசலாக ஊர் என்பது குறித்த லிஸ்டை வெளியிடும். அதன்படி இந்தாண்டிற்கான பட்டியலை டாம்டாம் அமைப்பு இப்போது வெளியிட்டுள்ளது. இதில் நமது நாட்டில் அதிக டிராபிக்கான நகரங்கள் லிஸ்டில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் அதிக டிராபிக் உள்ள நகரங்கள் லிஸ்டில் கொல்கத்தா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு 10 கிமீ தொலைவைக் கடக்க 34.33 நிமிடங்கள் ஆவதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை எங்கே:
தொடர்ந்து நாட்டின் அதிக டிராபிக் உள்ள நகரங்களில் 2வது இடத்தில் பெங்களூர் வருகிறது. அங்கு 10 கிமீ தொலைவைக் கடக்க 34.10 நிமிடங்கள் வரை ஆவதாகக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து புனே, ஹைதராபாத், மற்றும் சென்னை முறையே டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளது. அதில் புனேவில் 10 கிமீ தொலைவைக் கடக்க 33.22 நிமிடங்கள், ஹைதராபாத்தில் 31.30 நிமிடங்கள், சென்னையில் 30.20 நிமிடங்கள் ஆவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை (29.20 நிமிடம்), அகமதாபாத் (29.03 நிமிடம்), எர்ணாகுளம் (28.30 நிமிடம்), ஜெய்ப்பூர் (28.28 நிமிடம்), டெல்லி (23.24 நிமிடம்) ஆகியவை நாட்டில் நெரிசலான நகரங்கள் லிஸ்டில் 6 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.
கொல்கத்தா vs பெங்களூர் டிராபிக்:
மேலும், டிராபிக் தொடர்பாக வேறு சில முக்கிய தகவல்களும் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கொல்கத்தாவில் மக்கள் ஆண்டுக்கு சுமார் 110 மணி நேரம் வரை டிராபிக்கில் சிக்கிக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் சுமார் 32% பகுதிகள் நெரிசலானதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரை பொறுத்தவரை மக்கள் ஆண்டுக்கு சுமார் 117 மணி நேரம் வரை டிராபிக்கில் சிக்கிக்கொள்வதாகவும் அங்கு நகரின் 38% பகுதிகள் நெரிசலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்கத்தாவில் சராசரி வேகம் 17.4 கிமீ ஆக உள்ள சூழலில், பெங்களூர் நகரில் இது 17.6ஆக இருக்கிறது.
சர்வதேச அளவில்:
சர்வதேச அளவில் பார்க்கும்போது அதில் உலகிலேயே அதிக டிராபிக் உள்ள நகரமாக கொலம்பியா தலைநகர் பாரன்குவிலா உள்ளது. பாரன்குவிலா நகரில் 10 கிமீ தூரத்தை கடக்கவே 36.6 நிமிடங்கள் ஆவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் டிராபிக் நிறைந்த நகரம் என்ற பெயரை பாரன்குவிலா பெற்றுள்ளது. இந்திய நகரங்களில் கொல்கத்தா, பெங்களூர், புனே ஆகிய 3 நகரங்கள் உலகின் நெரிசலான நகரங்கள் லிஸ்டில் முறையே 2,3 மற்றும் 4ஆவது இடத்தை பிடித்துள்ளன.












Click it and Unblock the Notifications