திருந்தாத பாகிஸ்தான்.. ட்ரோன் தாக்குதலுக்கு தொடர் முயற்சி.. இண்டிகோ, ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து
டெல்லி: போர் நிறுத்தத்துக்கு நடுவேயும் கூட பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த முயன்று வருகிறது. நேற்று இரவு ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் ட்ரோன் மூலம் தாக்க முயன்றபோது அதனை நம் நாடு முறியடித்தது. தற்போது மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் சில முக்கிய இடங்களில் இருந்து விமான சேவைகளை ரத்து செய்வதாக இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிசூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதற்கு கடந்த 7 ம்தேதி நள்ளிரவு 1 மணிக்கு பிறகு சுமார் 25 நிமிடம் நம் நாடு பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. அதன்பிறகு முக்கிய 3 விமானதளங்கள் அழிக்கப்பட்டன.

பாகிஸ்தான் நம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஏவுகணை, ட்ரோன்கள், போர் விமானங்களை அனுப்பி தாக்க முயன்றது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இதற்கிடையே தான் நம் நாட்டின் அதிரடி தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் போர் நிறுத்தம் செய்ய பாகிஸ்தான் கெஞ்சியது. இதையடுத்து நம் நாடும் ஓகே சொன்னது. தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
ஆனாலும் கூட பாகிஸ்தான் திருந்தவில்லை. போர் நிறுத்தத்துக்கு நடுவேயும் கூட எல்லையில் ட்ரோன்களை அனுப்பி தாக்க முயற்சிக்கிறது.நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்தது தான். இருப்பினும் நம் நாடு அதனை முறியடித்தது. ஆனாலும் பதற்றம் நிலவியதால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு இன்று அதிகாலையில் எல்லையில் எந்த ட்ரோனும் பறக்கவில்லை.
இருப்பினும் பாதுகாப்பு கருதி இண்டிகோ விமான நிறுவனங்கள் சார்பில் 6 இடங்களில் இருந்து விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இண்டிகோ சார்பில் ஜம்மு காஷ்மீர், லே, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து இன்று விமானங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஏர் இந்தியா விமான நிறுவனம் சார்பில், ஜம்மு காஜ்மீர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம் நகர், சண்டிகர், ராஜ்காட் உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து இன்று விமான சேவைகள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 011 -69329333, 011 69329999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் airindia.com இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications