இன்டிகோ விமானிக்கு பளார் விட்ட பயணி.. அதிர்ந்த பணிப்பெண்.. எச்சரிக்கும் ஜோதிராதித்ய சிந்தியா
டெல்லி: விமானம் புறப்படுவதற்கு தாமதமானதையடுத்து இன்டிகோ விமானத்தின் விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணிகள் அத்து மீறி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 110 விமானங்கள் தாமதமாகியுள்ளது. 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று டெல்லியில் இருந்து கோவா செல்லவிருந்த விமானம் கடும் பனிமூட்டத்தால் பல மணி நேரம் தாமதமாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வந்த விமானியை பயணி ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

விமானியை பயணி தாக்கும் வீடியோவை விமானத்தில் இருந்து பயணி ஒருவர் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடும் பனிமூட்டத்தால் விமானம் பல மணி நேரம் தாமதமானதை தொடர்ந்து, பணியில் இருந்த விமானக் குழுவினருக்கு பதிலாக ஷிப்ட்க்கு புதிய விமானக் குழுவினர் வந்துள்ளனர். அப்போது மஞ்சள் நிற ஹூடி அணிந்த நபர் திடீரென கடைசி வரிசையில் இருந்து ஓடி வருவதும் விமானத்தின் இணை விமானி அனுப் குமாரை அவர் தாக்குவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு எத்தனை மணி நேரமாக நாங்கள் காத்திருப்பது என்று கோபத்தோடு கேட்டுக்கொண்டே மீண்டும் சண்டையிடுகிறார் அந்த பயணி. விமானம் தாமதமானதற்காக பயணி ஒருவர் விமானியை தாக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சம்பவம் நடந்த உடனேயே, விமானத்தில் இருந்த அந்த பயணி வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது பெயர் சாஹில் கட்டாரியா என்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, விமானி அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். விமான நிறுவனம் தற்போது வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. விமானத்தில் பயணிகள் அத்து மீறி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.












Click it and Unblock the Notifications