திடீரென பாகிஸ்தானிற்கு யூ டர்ன் போட்ட டெல்லி- கத்தார் இண்டிகோ விமானம்.. உயிரிழந்த பயணி! என்ன நடந்தது
இண்டிகோ விமானம் பாகிஸ்தானில் அவசரமாகத் தரையிறங்கியது
டெல்லி: டெல்லியில் இருந்து தோஹா சென்ற விமானம் மருத்துவ எமர்ஜென்சி காரணமாகப் பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இருப்பினும், விமானத்தில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொதுவாக அனைத்து வகையான போக்குவரத்தைக் காட்டிலும் விமான போக்குவரத்து பாதுகாப்பானது. ஒப்பீட்டளவில் ஓராண்டில் விமான விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ரொம்பவே குறைவாகவே இருக்கிறது.
மேலும், தொலைவில் இருக்கும் இரு நகரங்களுக்கு இடையே விமானத்தில் மிக வேகமாகச் செல்ல முடியும். இதன் காரணமாகப் பெரும்பாலானோர் விமான பயணத்தையே விரும்புகிறார்கள்.

விமானங்கள்
இந்தியாவில் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கொரோனா பாதிப்பு சமயத்தில் இடையில் சில காலம் மட்டும் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. அதன் பிறகு விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தே வருகிறது. இந்தியாவில் லோ காஸ்ட் கேரியர் எனப்படும் குறைந்த விலை விமானங்களே பெரியளவில் ஹிட் அடிக்கும். விலை குறைவு என்பதால் இதுபோன்ற விமானத்தில் பயணிப்பதையே இந்தியாவில் பலரும் விரும்புகிறார்கள்.

இண்டிகோ
அப்படி லோ காஸ்ட் கேரியராக மிகவும் பிரபலமாக இருக்கும் இந்திய நிறுவனம் இண்டிகோ. இதனிடையே டெல்லியில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம், 6E-1736, மருத்துவ எமர்ஜென்சி காரணமாகப் பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது. இருப்பினும், அந்த பயணியின் உயிரைக் காக்க முடியவில்லை. கராச்சியில் விமானம் தரையிறங்கிய போதிலும், அந்த நபர் உயிரிழந்துவிட்டார். அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.

உயிரிழப்பு
இது குறித்து இண்டிகோ தரப்பில் கூறுகையில், "டெல்லியில் இருந்து தோஹாவிற்கு செல்லும் இண்டிகோ விமானம் 6E-1736, மருத்துவ அவசரம் காரணமாக கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் புறப்பட்டவுடன் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது. இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பயணி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது" என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தரையிறக்கம்
இப்போது விமானம் டெல்லி திரும்பிய நிலையில், மற்ற பயணிகளை மீண்டும் தோஹோ அழைத்துச் செல்லும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. இது குறித்து கராச்சி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்திய விமான நிறுவனத்தின் விமானம் டெல்லியில் இருந்து துபாய்க்கு சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் பயணி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததுள்ளது. இதனால் மருத்துவ எமெர்ஜன்சியால் எங்களிடம் தரையிறங்க அனுமதி கேட்டனர்" என்றார்.

கேரளா
முன்னதாக கடந்த மாதம் சுமார் 168 பயணிகளுடன் கேரளாவின் கோழிக்கோடு ஏர்போர்டில் இருந்து சவுதியின் தம்மாம் செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கோழிக்கோட்டில் இருந்து புறப்படும் போது விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் மோதியது. இதனால் அதன் ஹைட்ராலிக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை திருவனந்தபுரத்தில் தரையிறக்க முடிவு செய்துள்ளனர். இருப்பினும், விமானம் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறும் ஆபத்து இருந்ததால்.. அதைக் குறைக்க விமானம் தரையிறங்குவதற்கு முன்பு சுமார் 2 மணி நேரம் அது அப்படியே மேலே பறந்து கொண்டு இருந்தது.

அரபிக் கடலில் எரிபொருள்
அப்போதும் எதிர்பார்த்த அளவுக்கு எரிபொருளை குறைக்க முடியவில்லை. இதனால், எரிபொருளை அரபிக்கடலில் எரிபொருளைக் கொட்டியுள்ளனர். அதன் பிறகு குறைந்தபட்ச எரிபொருளுடன் விமானத்தைத் திருவனந்தபுரம் ஏர்போர்டில் பத்திரமாகத் தரையிறக்கினர். விமானம் ஹைட்ராலிக் கோளாறுடன் தரையிறங்கியதால் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications