தீவிரமடைந்த விவசாயிகள் போராட்டம்.. பரவும் வதந்திகள்.. டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்ததால் பல இடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாய சங்கங்கள், குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி பெற்றிருந்தனர். காவல்துறையினரும் குறிப்பிட்ட வழித்தடங்களில் மற்றும் பேரணி நடத்த அனுமதி வழங்கினார்.
ஆனால், போராட்டம் நடத்திய விவசாயிகளில் சிலர், வழியை மாற்றி கொண்டு மத்திய டெல்லி பகுதிக்கு வந்தனர். அங்கு காவல்துறையினர் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டது. காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடைபெற்றது. பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

விவசாயி உயிரிழப்பு
போராட்டத்தின்போது டிராக்டரில் இருந்து விழுந்து ஒரு விவசாயி உயிரிழந்ததாக காவல் துறை தெரிவிக்கிறது. காவல்துறை தாக்குதலால் அவர் உயிரிழந்ததாக விவசாய சங்கத்தினர் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

செங்கோட்டை முற்றுகை
செங்கோட்டைக்கு விரைந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளால் டிராக்டர்கள் செங்கோட்டையில் நிறுத்தப்பட்டன. செங்கோட்டை கோபுரம் ஒன்றில் விவசாயிகள் தங்கள் கொடியை ஏற்றினர்.

சாலைகள் சீல்
இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், மத்திய டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன.

வதந்தி
போராட்டம் தொடர்பாக விவசாயிகள் மத்தியில் வதந்தி பரவுவதைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு புதிய இடங்களில் போராட்டங்களை நடத்துவதை, தடுக்கவும் இந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் எல்லைப்புற பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications