கொரோனா பாதித்தவருடன் மறைமுகத் தொடர்பு.. தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் விஜயக்குமார்
டெல்லி: கொரோனா பாதித்த மருத்துவருடன் தொடர்பில் இருந்த அதிகாரியுடன் தொடர்பில் இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகரும் சந்தனக் கடத்தல் வீரப்பனை என்கவுன்ட்டர் செய்தவருமான கே விஜயகுமார் ஐபிஎஸ் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
Recommended Video
அது போல் சிஆர்பிஎஃப் படையின் இயக்குநர் ஏ.பி. மகேஸ்வரியும் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார் கே விஜயகுமார் ஐபிஎஸ்.
இந்த நிலையில் சிஆர்பிஎஃப் படையில் இருந்த தலைமை மருத்துவ அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து கொரோனா பாதித்த மருத்துவ அதிகாரியுடன் தொடர்பிலிருந்த இன்னொரு அதிகாரியுடன் விஜயகுமார் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடர்பில் இருந்துள்ளார். அந்த அதிகாரிக்கு கொரோனா சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இல்லை என வந்துள்ளது.

தனிமை
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஜயகுமார் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். தேவைப்பட்டால் தானும் கொரோனா சோதனை செய்துக் கொள்வதாக தெரிவித்தார். அது போல் சிஆர்பிஎஃப் படையின் இயக்குநர் ஏ.பி. மகேஸ்வரியும் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

விதிகள்
இதுகுறித்து சிஆர்பிஎஃப் படையின் செய்தித் தொடர்பாளர் டிஐஜி மோசஸ் தினகரன் கூறுகையில் ஒரு சிஆர்பிஎஃப் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 7 அதிகாரிகள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. சிஆர்பிஎஃப் படையின் இயக்குநர் மகேஸ்வரியும், விஜயகுமாரும் கொரோனா பாதித்த மருத்துவருடன் நேரடி தொடர்பில் இல்லாவிட்டாலும் கொரோனா தடுப்பு விதிகளின்படி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர் என்றார்.

சிகிச்சை
இதையடுத்து தலைமை மருத்துவ அதிகாரி தங்கியிருந்த இடம் தூய்மை செய்யப்பட்டது. அந்த அதிகாரி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த மகேஸ்வரி உத்தரப்பிரதேச படைப்பிரிவை சேர்ந்தவர். அது போல் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான கே விஜயகுமார், 1975-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். பின் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பி திண்டுக்கல் போலீஸ் எஸ்பி ஆனார்.

மூத்த ஆலோசகர்
1991-இல் ஜெயலலிதா முதல்வர் ஆனதும் அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா 2001-ல் மீண்டும் முதல்வரான பிறகு கே.விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆனார். போலீஸ் கமிஷனராக இருந்த நிலையில் 2003-ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த கமாண்டோ படையின் தலைவர் ஆனார். பின்னர் 2004-ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ஆலோசகராக பணியாற்றி வந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றார். பின்னர் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் பணி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications