நடப்பு ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி சாத்தியமா?.. நிர்மலா சீதாராமன் கருத்துக்கு ப சிதம்பரம் பதிலடி
டெல்லி: நடப்பு ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு பதில் தரும் வகையில், இரட்டை இலக்க வளர்ச்சி என்பது அடைய முடியாத கனவாகவே தோன்றுகிறது என்று ப சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில்துறைகள் முடங்கின. இதனால், சர்வதேச அளவில் பெரும் பொருளதார நெருக்கடி ஏற்பட்டது.
கொரோனா 2- வது அலை தீவிரம் குறைந்த பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனால், பொருளாதாரம் படிபடியாக மீட்சி அடைய தொடங்கியது.

இந்தியா 5-ஆம் இடம்
அதிலும் இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்த அளவை விட வேகமாக மீண்டு எழுந்தது. இத்தகைய காரணங்களால் இந்தியாவின் பொருளாதாரம் பிரிட்டனை விட வளர்ச்சி அடைந்ததாக ப்ளூம்பெர்க் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 5-ஆம் இடம் பிடித்தது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டது.

இரட்டை இலக்க வளர்ச்சி
அப்போது நிர்மலா சீதாராமன் கூறுகையில், ''நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என்றும், அதற்காக நாங்கள் உழைத்து வருகிறோம்'' என்றும் கூறினார். மேலும் அவர் 'நாம் பேசிக்கொண்டிருக்கும் சில வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா ஒரு நல்ல நிலையில் தான் இருக்கிறது. இது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமும் கூட'' என்றார்.

ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளவில்லை
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பதில் தரும் வகையில் ப சிதம்பரம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், '2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.. ஆனால், ரிசர்வ் வங்கி அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

அடைய முடியாத கனவாகவே..
நான்கு காலாண்டுகளில் 16.2, 6.2, 4.1 மற்றும் 4.0 என்று வளர்ச்சி இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதன்படி ஆண்டு வளர்ச்சி சுமார் 7.5 சதவீதமாக இருக்கும். அதேவேளையில், நாம் முதல் காலாண்டை ரிசர்வ் வங்கி கணித்ததை விட குறைவாக அதாவது 13.5 சதவீதம் என துவங்கியிருக்கிறோம். அடுத்த மூன்று காலாண்டுகளில் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? 2022-23-ல் இரட்டை இலக்க வளர்ச்சி என்பது அடைய முடியாத கனவாகவே தோன்றுகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications