“ஸ்டாலின் ஃபேக்டர்”.. 2024 தேர்தலில் “கேம் சேஞ்சர்” ஆகுமா திமுக? பாஜகவை எதிர்த்து பெரும் கூட்டணி
டெல்லி: பாஜகவுக்கு எதிராக 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து பிரம்மாண்ட கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக தலைவர்கள் சந்திப்புகள் தொடர்ந்து வரும் நிலையில், அதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முக்கிய இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக இருக்கும் மாநில கட்சிகள், காங்கிரஸ், இடதுசாரிகளை சேர்த்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. ஆனால் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை.
அதேநேரம் கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு இந்த பேச்சுவார்த்தை தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு சாதகமாக முடிவுகள் வரலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்க சில கட்சிகள் போட்டிபோடும் நிலையில், கர்நாடக தேர்தல் கணிப்புகள் உண்மையானால் காங்கிரஸுக்கு அது சாதகமாக அமையும்.

அதே நேரம் 2 விசயங்கள் இதில் தெளிவாகிறது. அதன்படி ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி சேர விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், இதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துமாறு காங்கிரஸ் கேட்டுக்கொண்டு உள்ளது. இதனை முதலில் தொடங்கிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முக ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, நிதீஷ் குமார் ஆகியோருடன் ஏப்ரல் 7 ஆம் தேதி பேசினார்.
அதன் தொடர்ச்சியாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர். மறுநாள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து பேசினர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் மும்பையில் சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார்.

இந்த சந்திப்புகளின் பின்னணியில், தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருக்கிறார். இம்முறை எப்படியாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ள அவர் கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்கள் மற்றும் கூடுதல் சீட்டுகளை விட்டுத் தர முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலைபாட்டில் நிதீஷ் குமார், முக ஸ்டாலின் ஆகியோரும் உறுதியாக உள்ளனர்.
இதில் குறிப்பாக திரிணாமூல், ஆம் ஆத்மி, பிஆர்எஸ் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு நிதீஷ் குமாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி அவரும் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார். இதில் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் பாசிடிவான பதில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அக்கட்சித் தலைவர்கள் மீது மத்திய அரசு நிறுவனங்கள் எடுத்து வரும் நடவடிக்கையால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டணியில் மற்றுமொரு முக்கிய விசயமாக பேசப்படுவது ஸ்டாலின் ஃபேக்டர்தான். காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையிலான உறவு நாடறிந்தது. இவற்றின் கூட்டணியும் உறுதியாகவே உள்ளது. எனவே இரு கட்சிகளும் ஒற்றுமையாக கூட்டணிக்கான முயற்சியை முன்னோக்கி நகர்த்தி செல்கின்றன. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் அடுத்து அவர் பேச்சுவார்த்தை நடத்த செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல் முறையான முன்னாள் பிரதமர் விபி சிங்கிற்கு சென்னையில் சிலை அமைப்பதாக அறிவித்ததும் இந்த நகர்வின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அவருக்கு பிரதமராக வேண்டும் என்ற விருப்பம் எதுவும் இல்லை என்றும், அதே சமயம் மற்ற தலைவர்களை விட அவர் முக்கிய இடம் பிடித்து இருப்பார். அவரது நகர்வுகளை உற்று நோக்க வேண்டும் என மூத்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications