முதியோர் உதவித் தொகையை உயர்த்தும் வாய்ப்பு உள்ளதா? ரவிக்குமார் எம்பிக்கு மத்திய அரசு தந்த பதில்
டெல்லி: நாடு முழுவதும் முதியோர் உதவித் தொகையை மத்திய அரசு உயர்த்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பது நாடாளுமன்றத்தில் இன்று அளிக்கப்பட்ட பதில் மூலம் தெரிய வந்துள்ளது.
நாடாளுமனறத்தின் லோக்சபாவில் விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் முதியோர் உதவி தொகைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறும் போது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 முதல் 79 வயதுக்குட்பட்ட முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஓய்வூதியமும், 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் ஓய்வூதியமும் தேசிய சமூக உதவித் திட்டத்தின்(என்எஸ்ஏ) கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது.
தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. அதேநேரம் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் என்எஸ்ஏபியின் கீழ் மத்திய அரசு தரும் உதவித்தொகையை அதிகமாக அளிக்க ஊக்குவிகிறோம்.
இதன்படி முதியோர் ஓய்வூதியத்தை பயனாளிக்கு மாதம் ரூ.50 முதல் ரூ.3000 ரூபாய் வரை மாநில அரசுகளால் உயர்த்தி வழங்கப்படுகிறது. 2002-03 முதல் 2013-14 வரை, மாநிலத் திட்டமாக என்எஸ்ஏபி செயல்படுத்தப்பட்டது.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கும். தேசிய குடும்ப நலத் திட்டம் மற்றும் அன்னபூர்ணா ஆகிய அனைத்து துணைத் திட்டங்களுக்கும் மத்திய அரசு கூடுதல் உதவி தொகை வழங்கி வருகிறது.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் - இரண்டும் 2009 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2014-15 முதல், இத்திட்டம் 'மத்திய நிதியுதவித் திட்டமாக' மாற்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது" இவ்வாறு அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி திமுக எம்.பி. டி.ரவிகுமார் கூறுகையில், மத்திய அரசின் புள்ளி விவரங்களின் படி, தமிழ்நாட்டில் 2011-12 இல் 12 லட்சத்து 4 ஆயிரமாக இருந்த முதியோர் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 12 லட்சத்து 39 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஓய்வூதியத் தொகைக்கான நிதி 2021-22 இல் 589.85 கோடி ஆக இருந்தது.
2016-17 முதல் 3 ஆண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் 360.15 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2019-20 இல் 250 கோடியும் 2020-21 இல் 201.26 கோடியும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. முதியோர் உதவி தொகையை மத்திய அரசு உயர்த்தாவிட்டாலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு உயர்த்தி உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications