ராஜ்யசபாவில் நியமன எம்.பி.யாக இசைஞானி இளையராஜா தமிழில் பதவியேற்றார்
டெல்லி: நாடாளுமன்றத்தில் ராஜய்சபாவின் நியமன எம்.பி.யாக இசைஞானி இளையராஜா இன்று தமிழில் பதவியேற்றார். முன்னதாக டெல்லிக்கு நேற்று வருகை தந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற ராஜ்யசபாவுக்கு ஜனாதிபதியால் 12 பேர் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்படுவது மரபு. துறைசார் பிரபலங்கள், நியமன எம்.பிக்களாக நியமிக்கப்படுவர். நடப்பாண்டில் இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, தர்மசாலா கோவில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமையன்று தொடங்கியது. அன்றைய தினம் நியமன எம்.பி.க்கள், ராஜ்யசபாவில் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் வெளிநாட்டில் இருந்ததால் இளையராஜா எம்.பி. பதவி ஏற்க இயலாமல் இருந்தது.
இதன்பின்னர் அமெரிக்கா நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பினார் இளையராஜா. அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று இளையராஜா டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்திலும் இளையராஜாவுக்கு மேள தாளங்கள் முழங்க அசத்தலான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் சென்றார் இளையராஜா. ராஜ்யசபாவில் எம்.பி.யாக தமிழில் இளையராஜா பதவியேற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications