"சிவசக்தி"யை சுற்றி வரும் ரோவர்.. மேற்பரப்பில் சக்கரத்தின் கால் தடத்துடன் இஸ்ரோ புதிய வீடியோ
டெல்லி: நிலவில் தென் துருவத்தில் பிரக்யான் ரோவர் நகர்ந்து செல்லும் புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான் 3 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த தென் துருவம் அதிக குளிர்ச்சியான பகுதி என்பதாலும் இருளான பகுதி என்பதாலும் இந்த பகுதிக்கு பிற நாடுகள் செல்ல முயற்சியே எடுக்கவில்லை.

ஆனால் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கேற்ப சந்திரயான் 2வின் தோல்வியை தொடர்ந்து சந்திரயான் 3 கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் உள்வட்ட பாதை, வெளிவட்ட பாதை உள்ளிட்ட புகைப்படங்களை அனுப்பியபடியே இருந்தது.
இந்த நிலையில் சரியாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியது. அது தரையிறங்கியதும் அதிலிருந்து லேண்டர் விக்ரம் பிரிந்து சென்றது. அதன் பக்கவாட்டு சாய்வுதளம் வழியாக பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் மெல்ல தரையிறங்கியது. ரோவர் தரையிறங்கியதும் நிலவை ஒரு ரவுண்ட் வலம் வந்தது.
தற்போது 14 நாட்கள் அங்கு சூரிய ஒளி இருக்கும் என்பதால் இந்த நாட்களில் ரோவர் எடுக்கும் புகைப்படங்களை லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி இன்று பெங்களூரில் தரையிறங்கி இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அவர் பேசுகையில் சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்றார். அத்துடன் விண்கலத்தின் லேண்டர் பாகம் விழுந்து நொறுங்கிய பகுதி திரங்கா என அடையாளம் காணப்படும் என்றார். அது போல் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என பெயரிட்டார்.
இந்த நிலையில் தென் துருவத்தில் நிலவின் ரகசியங்களை ஆராயும் பிரக்யான் ரோவர் சிவசக்தி பகுதியை சுற்றி வலம் வரும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 6 சக்கரங்களை கொண்ட 26 கிலோ எடைகொண்ட இந்த ரோவரில் உள்ள கேமரா மூலம் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன. இந்த 14 நாட்களும் இந்த ஆய்வுகள் நடத்தப்படும். சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள அனைத்து கருவிகளும் பணியாற்றத் தொடங்கியுள்ளன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications