காங்கிரசுக்கு ரூ.3500 கோடி அபராதம்.. "தேர்தல் முடியும் வரை நடவடிக்கை இல்லை!" வருமான வரித்துறை உறுதி
டெல்லி: வருமான வரி கணக்கில் முரண்பாடு இருந்ததாக கூறி ரூ.3,500 கோடியை காங்கிரஸ் கட்சிக்கு அபராதமாக வருமான வரித்துறை விதித்திருந்தது. இதற்கு எதிராக காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில், தேர்தல் முடியும் வரை அபராதத்தை வசூலிக்க நிர்ப்பந்திக்க மாட்டோம் என வருமான வரித்துறை நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளை முடக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.200 கோடி வரி பாக்கி என்று கூறி காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி வங்கி கணக்கு முடக்குவது கட்சியை முடக்குவதற்கு சமம் என காங்கிரஸ் விமர்சித்திருந்தது.

இதனையடுத்து கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை மறுமதிப்பீடு செய்யும் வேலைகளை வருமான வரித்துறை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டது. இதனையடுத்து சில மணி நேரங்களில் ரூ.1700 வரி பாக்கி இருப்பதாக காங்கிரஸுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்கை ஆய்வு செய்த வருமான வரித்துறை, இதில் ஏராளமாக முரண்பாடுகள் இருப்பதாகவும் எனவே ரூ.3,567 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது.
ஏற்கெனவே, கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போன்ற இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரசுக்கு ரூ.3500 கோடி அபராதம் விதித்தது மத்திய அரசு மீது விமர்சனங்களை எழச்செய்தது.
தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகியது. இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, “தேர்தல் முடியும் வரை அபராதத்தை வசூலிக்க நிர்ப்பந்திக்க மாட்டோம்” என்று உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications