ஆணவத்தால் தோல்வியை சந்தித்துள்ளது பாஜக.. மக்கள் முடிவை மனதார ஏற்கிறோம்.. டெல்லியில் கார்கே பேட்டி!
டெல்லி: மோடி பேசிய பொய்களை மக்கள் நிராகரித்து விட்டனர், தார்மீகமாகவும் அரசியல் ரீதியாகவும் வெற்றியை இழந்துள்ளது பாஜக என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை நெருங்குகிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக மட்டும் 240 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 232 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக சமாஜ்வாடி கட்சி 36 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாஜகவுக்கு பெரும்பான்மை சீட் எண்ணிக்கையான 272+ கிடைக்காத நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி; மக்கள் தீர்ப்பை நாங்கள் மனதார ஏற்கிறோம்.
காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். மோடிக்கு தோல்வி மூலம் மக்கள் பாடம் கற்பித்துள்ளனர். மக்களுக்கும் மோடிக்கும் நடந்த போட்டியில் மக்கள் வென்றிருக்கிறார்கள். இந்த மக்களவைத் தேர்தல் வெற்றி மக்களுக்கான வெற்றி, ஜனநாயகத்துக்கான வெற்றி.
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. மோடி பேசிய பொய்களை மக்கள் நிராகரித்து விட்டனர். தார்மீகமாகவும் அரசியல் ரீதியாகவும் வெற்றியை இழந்துள்ளது பாஜக. ஆணவத்தால் தோல்வியை சந்தித்துள்ளது பாஜக." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications