வரி விலக்கு கிடையாது.. ரூ.199 கோடி நன்கொடை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செக்
டெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் 2017-18 நிதியாண்டின் நன்கொடையாக வந்த ரூ.199 கோடிக்கு வருமான வரி விலக்கு கேட்டு முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த வருமான வரி மேல் முறையீட்டு ஆணையம், ரூ.199 கோடிக்கும் வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்து விலகி11 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. பல மாநிலங்களிலும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் தவறி கொண்டிருக்கிறது. ஆளுமையான தலைவர்கள் இல்லாதது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதையெல்லாம் விட வரி பிரச்னை காங்கிரஸ் கட்சியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ரூ.1,745 கோடி வரி செலுத்த சொல்லி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மொத்தமாக ரூ.3,567 கோடிக்கு வரி செலுத்த வேண்டும் என்று பேரிடியை இறக்கினார்கள். இதற்கு எதிராக அந்தக் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜீனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதை வரி பயங்கரவாரம் என்றும் விமர்சித்திருந்தனர்.
முக்கியமாக 2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை, 2018 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் கட்டாமல், காங்கிரஸ் கட்சி 2019 பிப்ரவரி 2 ஆம் தேதி வருமான வரி கணக்கை சமர்பித்துள்ளதாக தெரிகிறது. அப்போது எந்த வருமானமும் இல்லை என்பதுடன், வருமானவரி சட்டம் 12அ கீழ் ரூ.199.15 கோடிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.
அதாவது கட்சிக்கு நன்கொடையாக வந்த தொகையில் விலக்கு கேட்டுள்ளனர். ஆனால் வருமானவரித்துறை ரூ.199 கோடிக்கு வருமான வரி செலுத்த சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நன்கொடையாக வந்த தொகையில் விலக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் வருமானவரி மேல்முறையீட்டு ஆணையத்தில் முறையீடு செய்தனர்.
இதுதொடர்பாக 2019 செப்டம்பரில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, காங்கிரஸ் கட்சி ரூ.14.49 லட்சம் ரொக்கப் பணத்தை நன்கொடையாக வாங்கியது தெரியவந்தது. வருமானவரி சட்டப்படி, ரூ.2,000க்கு மேல் நன்கொடை செய்யும் பணத்தை காசோலை அல்லது இதர வங்கி பரிவர்த்தனை மூலமாக தான் கையாள வேண்டும். அந்த நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியின் மொத்த வருவாய் ரூ.197.43 கோடியாக என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், ரூ.199.15 கோடி நிதியை கையாண்டுள்ளனர். ரூ.1.71 கோடி உபரியாக இருப்பதால் விலக்கு அளிக்க முடியாது என்று கூறி ரூ.199.15 கோடிக்கும் வரி செலுத்த வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டனர். இதை வருமானவரித்துறை ஆணையரும் கடந்த 2023 மார்ச் 28 ஆம் தேதி தன்னுடைய உத்தரவில் உறுதி செய்திருந்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் மீண்டும் 2024 ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்திருந்தது.
இதை இன்று விசாரித்த வருமானவரித்துறை மேல்முறையீடு ஆணையம், "வரி விலக்கு விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் வருமான வரி கணக்கை, அறக்கட்டளைகள் போல கருத முடியாது. இரண்டுக்கும் மாறுபட்ட விதிகள் உள்ளன. எனவே குறிப்பிட்ட நிதியாண்டுக்கான வருமான வரியை நிச்சயம் செலுத்த வேண்டும்." என்று கூறி காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications